புதுச்சேரி, உப்பளம் துறைமுக வளாகத்தில் இன்று தவெக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்துக்கு இன்று காலை 7.30 மணி முதல் தொண்டர்கள் வர தொடங்கினர். அவர்களை போலீஸார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து, கியூ ஆர் கோடு பாஸ் பரிசோதனை செய்து அனுமதித்தனர். அப்படி கூட்டத்துக்கு வந்திருந்த ஒருவரை சோதனை செய்தபோது, அவரிடம் துப்பாக்கி இருந்தது. அதைக் கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த இடத்தில் பரபரப்பும் ஏற்பட்டது.
இது தொடர்பாக அந்த நபரிடம் விசாரித்தபோது, தன்னுடைய துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருப்பதாகக் கூறி, அதை போலீஸாரிடம் காண்பித்திருக்கிறார்.
ஆனால் போலீஸார், `தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு புதுவையில் அனுமதியில்லை. பொதுக்கூட்டத்துக்கு ஏன் துப்பாக்கி எடுத்து வந்தீர்கள்?” என கேள்வி எழுப்பினர். மேலும் அவரிடம் விசாரணை நடத்த ஓதியஞ்சாலை காவல் நிலையத்துக்கு அந்த நபரை அழைத்துச் சென்றனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த டேவிட் என்பதும், மத்திய சி.ஆர்.பி.எஃப் படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது.