புதுச்சேரி, நவம்மாள் காப்பேர் நவகோள் லிங்கேஸ்வரர் ஆலயம் : ஒன்பது கோள்களின் தோஷமும் தீரும் ஒரேதலம்!

Spread the love

பொதுவாக நவகிரகங்கள் தனிச்சந்நிதியில் ஆளுக்கொரு திசை பார்த்துக்கொண்டு எழுந்தருளியிருப்பார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் ஈசனின் திருவடி நிழலில் ஒரே சந்நிதியில் ஒரே நேர்கோட்டில் எழுந்தருளியிருக்கும் தலம்தான் நவம்மாள் காப்பேர் நவகோள் லிங்கேஸ்வரர் கோயில்.

புதுச்சேரியை அடுத்துள்ள கண்டமங்கலம்ஒன்றியம், பங்கூர் அருகே அமைந்திருக்கிறது `நவம்மாள் காப்பேர்’ என்ற கிராமம். `நவகோள் காப்பேறு’ என்ற பெயரே மருவி `நவம்மாள் காப்பேர்’ என்றானது என்கிறார்கள். இங்கே கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு நவாம்பிகை சமேத நவகோள் லிங்கேஸ்வரரை நவகிரகங்களும் வழிபட்டு அருள்பெற்றுள்ளார்கள் என்கிறது தலபுராணம். கருவறையிலேயே ஈசனை நவகிரகங்களும் வணங்கி நிற்கிறார்கள். அதனாலேயே இந்தப் பரமன், `நவகோள் லிங்கேஸ்வரர்’ எனும் திருப்பெயர் கொண்டு அருள்கிறார். இதன் பின்னணியில் ஒரு புராணத்தகவலும் உள்ளது.

நவம்மாள் காப்பேர் நவகோள் லிங்கேஸ்வரர்

ஒருமுறை நவகிரகங்களுக்குள் போட்டியும் பொறாமையும் உண்டாயின. இதனால் கோள்கள் தங்களுடைய பராக்கிரமத்தைக் காட்டத் தொடங்கின. கோள்களின் போக்கினால் இயற்கை மாறியது. இதனால் உலகில் பஞ்சமும் பசியும் உருவாயின. வேள்விகள், அறங்கள் குறைப்பட்டு நிற்க, தர்மம் வீழ்ந்து அதர்மம் மேலோங்கியது. இந்திரன், திருமால், பிரம்மன் முதலானோர் சமரசம் பேசியும் பயனில்லாமல் போனது.

தேவர்களும் முனிவரும் ஈசனைச் சரணடைந்து அவரிடம் முறையிட்டனர். ஈசன் `சித்தர் காடு’ என்று சொல்லப்பட்ட இந்தப் பகுதியில் சுயம்புவாகத் தோன்றி அருளியதோடு நவகிரகங்களையும் தன் முன் வர ஆணையிட்டார். நவகிரகங்கள் ஈசனை தரிசித்ததுமே தம் ஆணவத்தை இழந்தன. அவர் பொற்பாதங்களைப் பணிந்துகொண்டன.

“இனி உயிர்களின் நன்மைக்காக இணைந்து செயல்பட்டு பிரபஞ்சத்தின் நலம் காப்போம்” என உறுதி அளித்தன. மேலும் இந்தத் தலத்தில், ‘எங்களுக்குக் காட்சி தந்த இதே கோலத்தில் தாங்களும் இங்கேயே எங்களுடன் வீற்றிருக்க வேண்டும். இங்கு வந்து தங்களை வழிபடும் அன்பர்களுக்குக் கோள்களாகிய நாங்கள் ஒன்பது பேரும் எல்லாவித நன்மைகளையும் அருள் வோம்’ என்றும் வேண்டின.

நவம்மாள் காப்பேர் நவகோள் லிங்கேஸ்வரர்

அதை ஏற்ற ஈசனும் அங்கே கோயில்கொண்டார். அவரின் திருவருளால் அந்த இடம் புண்ணிய க்ஷேத்திரமானது. பரமனுக்கும் அற்புதமாய் ஆலயம் எழும்பியது. அன்றுமுதல் இன்றுவரை அங்கு வந்து வழிபடும் அனைவருக்கும் நவகிரகங்கள் தம் ஆசியை வழங்கிய வண்ணம் உள்ளன. எப்படிப்பட்ட கிரக தோஷமும் அங்கு சென்று வழிபட்டால் விலகிவிடுவதாகச் சொல்கிறார்கள் பக்தர்கள்.

சோழர்கள் காலத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டு, வழிபாடுகளும் சிறப்புற நடந்து வந்தனவாம். பின்னர், காலப்போக்கில் ஆலயம் சிதைந்து போனது. ஈசன் தன்னை சிவனடியார் ஒருவர்மூலம் வெளிப்படுத்தினார். ஊர் மக்கள் சேர்ந்து தங்களுக்குத் தெரிந்த வகையில் பூஜைகள் செய்து வந்தனர்.

சித்தர் ஒருவர் இவ்வூரைப் பற்றி அறிந்து வந்து வழிபட்டதோடு புராணத் தகவல்களையும் எடுத்துச் சொன்னார். அதன்பின் ஊர் மக்கள் இணைந்து இந்த ஆலயக் கும்பாபிஷேகத்தைச் சிறப்பாகச் செய்து முடித்தனர்.

சிறிய ஆலயமாக இருந்தாலும் மிகுந்த சாந்நியத்துடன் சிறப்பாக வழிபடப்பட்டு வருகிறது. நவகோள்களும் கருவறையில் ஈசனுடன் வீற்றிருக்க, நவாம்பிகை தனிச் சந்நிதியில் அருள்கிறாள். வரப் பிரசாதியான அம்பிகையை வணங்கி வழிபட்டால், மங்கல வாழ்வு நிலைக்கும் என்கிறார்கள் பெண்கள்.

நவம்மாள் காப்பேர் நவகோள் லிங்கேஸ்வரர்

இங்கு நவகிரக பரிகார பூஜை, குருப் பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்ற வைபவங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. `க்ஷண நேரம் இங்கு வந்து பிரார்த்தித்தாலும் ஏழேழ் ஜன்மங்களுக்குத் தொடர்ந்து வரும் கிரக தோஷங்கள் யாவும் தீரும்’ என்பது இத்தலத்தின் நம்பிக்கை. வாய்ப்பிருக்கும் அன்பர்கள் புதுச்சேரி செல்லும்போது நவம்மாள் காப்பேர் சென்று நவகோள் லிங்கேஸ்வரரை வழிபட்டு வாருங்கள். கிரக தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு ஸித்திக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *