“தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்கிறேன்…”
புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “உலகின் தொன்மையான மற்றும் இனிமையான தமிழ் மொழியில் என்னால் பேச முடியவில்லை என்பதற்காக முதலில் உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.
இப்போது நான் புதுச்சேரிக்கு வந்திருப்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, புதுச்சேரியில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் எப்படியான வளர்ச்சித் திட்டங்களெல்லாம் நடைபெற்றிருக்கின்றன என்பதைக் கூற வந்திருக்கிறேன். மற்றொன்று, புதுச்சேரியை ஏற்கெனவே ஆட்சி செய்தவர்களின் முகத்திரையைக் கிழித்திட வந்திருக்கிறேன்.

மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, நாள்தோறும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவார்கள். ஆனால் அந்த அன்றாடத் தாக்குதல் குறித்து அப்போதைய பிரதமரோ, உள்துறை அமைச்சரோ, பாதுகாப்பு அமைச்சரோ வாய் திறக்க மாட்டார்கள்.
கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உயிரிழந்தார்கள். நாட்டுக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த அந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
அதேசமயம் அந்தத் தாக்குதலுக்காக எதிரிகளின் இடத்திற்கே சென்று வான்வழித் தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்தோம். இரண்டாவதாக, பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தினோம்.