தமிழகம், புதுச்சேரியில் எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம், வில்லியனூர் தனியார் திருமண நிலையத்தில் இன்று மதியம் நடைபெற்றது. அங்கு செய்தியாளர்களை சந்தித்த சீமான், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர், கோவை, மதுரை மெட்ரோ திட்ட அறிக்கையை மத்திய அரசு ரத்து செய்ததை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சீமான், `அந்த திட்டமே சரியில்லாத திட்டம். சாலைகளை சீரமைத்தாலே பயனுள்ளதாக இருக்கும்’ என்றார்.

தொடர்ந்து, `அது வளர்ச்சித் திட்டம்தானே…’ என்று நிருபர் கேள்வி எழுப்பியதற்கு, `உனக்கு அந்த வளர்ச்சி வேண்டும் என்றால் நீ போய் போராடி வாங்கிக்க…’ என்று ஒருமையில் பேச ஆரம்பித்தார் சீமான். அதையடுத்து SIR குறித்து மற்றொரு நிருபர் எழுப்பிய கேள்விக்கு, `SIR-ஐ மம்தா எதிர்க்கிறார். ஆர்ப்பாட்டம் செய்கிறார்.
ஆனால் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது ? SIR-ஐ செயல்படுத்தும் கட்சி எது ? அங்கன்வாடியில் வேலை செய்பவர்களையும், சத்துணவுக் கூடத்தில் வேலை செய்பவர்களையும் BLO-வாக நியமித்தது கணக்கெடுக்க அனுப்பியது யார்… தி.மு.க தானே…?’ என்றார் சீமான்.