புதுச்சேரி சுகாதாரத் துறையில் சுகாதார உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் அய்யனார், தமிழர்களின் மரபு மற்றும் பாரம்பர்யத்தைப் பாதுகாப்பதில் ஆழ்ந்த விருப்பம் கொண்டவர்.
கடந்த முப்பது ஆண்டுகளாக முன்னோர்கள் பயன்படுத்திய பித்தளை, வெண்கலம், செம்பு, மரம் மற்றும் மண்ணால் ஆன பழங்காலப் பொருட்களைச் சேகரித்தும், மீட்டெடுத்தும் வருகிறார்.
இவற்றை நாளைய தலைமுறைக்காக கல்லூரிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் காட்சிப்படுத்தியும் வருகிறார். இதன் மூலம் பழமை மற்றும் முன்னோர்களின் வாழ்வியல் முறையை மீட்டெடுத்து இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.
பழங்காலத்தில் வீட்டில் பெண்கள் பருவம் அடைந்தவுடன் அவர்களுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தி, தாய்மாமன் சீர் செய்வது வழக்கம்.

அப்போது ஆடம்பரச் செலவுகள் இல்லாமல், அந்தந்தக் குடும்பங்களில் விளைவித்த நெல், தானியங்கள், காய்கறிகள், கிழங்குகள் மற்றும் வளர்த்த கால்நடைகளையே சீராகக் கொடுத்து வந்தனர். காலப்போக்கில் அந்த நடைமுறை ஆடம்பரச் செலவுகளாக மாறிவிட்டது.
இப்படியான சூழலில்தான் பாரம்பர்யத்தை பொது நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல், குடும்ப விழாக்களிலும் காட்சிப்படுத்தினால் மக்கள் அதைப் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதை உணர்ந்த அய்யனார், தன்னுடைய தங்கை மகளின் மஞ்சள் நீராட்டு விழாவில் பாரம்பர்ய நெல் வகைகளை சீர் வரிசையாகத் தந்து காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இது பற்றி விகடனிடம் பேசிய அய்யனார், “மரபுசார்ந்த விஷயங்களில் எனக்கு உள்ள ஆழ்ந்த ஈடுபாடுதான் இந்த முயற்சிக்குக் காரணம். பழமை, மரபு, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றின் உயிர்ப்பை உணரவைக்கும் விதமாக சுப நிகழ்வுகளிலும் மரபுசார்ந்த பொருள்கள் இடம்பெற வேண்டும் என்பது என் நோக்கம்.