புயலாக மாறும் காற்றழுத்தம்? துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு:தமிழகத்தில் மிகக்கனமழை பெய்யும் – Kumudam

Spread the love

புயலாக மாற வாய்ப்பு  

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளில் நேற்று (ஜனவரி 7) காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருந்த இந்தச் சுழற்சி, இன்று (ஜனவரி 8) மணிக்கு 15 கி.மீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, இது மட்டக்கிளப்பிற்கு சுமார் 790 கி.மீ தொலைவிலும், சென்னைக்குத் தெற்கு-தென்கிழக்கே 1270 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.வானிலை ஆய்வு மையம் இதுகுறித்துத் தெரிவிக்கையில், அடுத்த 24 மணி நேரத்தில் இது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து புயலாக மாற வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது. 

துறைமுகங்களில் எச்சரிக்கை

புயல் உருவாகும் வாய்ப்புள்ளதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு என்பது, புயல் உருவாகக்கூடிய வானிலைச் சூழல் ஏற்பட்டுள்ளது என்பதையும், துறைமுகங்கள் பாதிக்கப்படாமல் பலமாகக் காற்று வீசும் என்பதையும் குறிக்கிறது.

தமிழகத்திற்கு மிகக் கனமழை பெய்யும்

இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் நகர்வால், தமிழகத்தில் ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *