வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
புகழ்பெற்ற இந்திய மகப்பேறு மருத்துவர்களில் ஒருவரான மருத்துவர்.கே.லட்சுமிபாய், மகளிர் நலவியல் மருத்துவத்துறையில் புற்றுநோய் சிகிச்சை சேவை வழங்குவதற்காக புவனேஷ்வர் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு (எய்ம்ஸ்) தனது வாழ்நாள் சேமிப்பான 3.4 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
5/12/2025 அன்று தனது நூறாவது பிறந்த நாளை கொண்டாடவிருந்த சில நாட்களுக்கு முன் இந்த போற்றுதலுக்குரிய பெருஞ்செயலை அவர் செய்துள்ளார்.
தான் வழங்கும் இந்த பணம் மகளிர் நல புற்றுநோயியல் திட்டத்தை நிறுவவும், எதிர்காலத்தில் மகளிர் நல புற்றுநோயியல் துறைக்கென சிறப்பு மருத்துவர்களை உருவாக்கவும், எண்ணற்ற பெண்களின் வாழ்க்கைக்கான நம்பிக்கையை வழங்கவும் உதவ வேண்டும் என்பதே தனது தாழ்மையான விருப்பம் என்று இந்தக் கொடையை வழங்கும்போது மருத்துவர்.கே.லட்சுமிபாய் கூறினார்.
1945 ஆம் ஆண்டு கட்டாக்கில் ஆரம்பிக்கப்பட்ட எஸ்சிபி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை மருத்துவம் பயின்ற லட்சுமி பாய் 1950 ஆம் ஆண்டு மருத்துவரானார். பின்னர் மகளிர் நல மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற 1958 ஆம் ஆண்டு சென்னை வந்த மருத்துவர்.லட்சுமிபாய் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவத்துறையில் பட்டயச் சான்றிதழ் பெற்றார். அதே மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ முனைவர் பட்டமும் பெற்றார்.