புஷ்பா 2 திரைப்படம் பார்க்கச் சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி வியாழக்கிழமை காலை பலியானார்.
நடிகர் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புஷ்பா இரண்டாம் பாகம் திரையரங்குகளில் இன்று காலை வெளியாகியுள்ளது.
படம் வெளியாவதற்கு முன்னதாகவே, ஓடிடி உரிமம், திரையரங்கு உரிமம் என ரூ. 1,000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இதையும் படிக்க : புஷ்பா 2: பார்வை, செவித்திறன் குறைபாடுடையோரும் கண்டுகளிக்க சிறப்பு வசதி!
தெலுங்கு, தமிழ், ஹிந்து, கன்னடம் என ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லாததால் புஷ்பா 2 படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு மேல் திரையிடப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களில் அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் அசம்பாவிதம் நடந்துள்ளது.
கணவர், குழந்தைகளுடன் புஷ்பா 2 சிறப்புக் காட்சி பார்ப்பதற்காக ஹைதராபாத்தில் உள்ள திரையரங்குக்கு அதிகாலையிலேயே வந்த பெண் ஒருவர், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
திரையரங்கில் மயக்கமடைந்த ரேவதிக்கு (வயது 39) அங்கிருந்த காவலர்கள் முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும், அவரது குழந்தைகளுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அஅளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.