திருவள்ளூர்: வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரிப்பால், சென்னை குடிநீர் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புழல் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை குடிநீர் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து அதிகளவில் நீர்வரத்து தொடங்கியதால், பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருந்தது. பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த 15-ம் தேதி மதியம் முதல் பூண்டி ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நேற்று காலை 6 மணியளவில் பூண்டி ஏரிக்கு, நீர்வரத்து விநாடிக்கு 3,970 கன அடியாகவும், ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு, விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாகவும் இருந்தது. இதனால், 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு, 35 உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர்இருப்பு, 2,601 மில்லியன் கன அடியாகவும், நீர்மட்ட உயரம், 33.27 அடியாகவும் இருந்தது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து, விநாடிக்கு 5,500 கனஅடியாக இருந்தது. ஆகவே, அப்போது பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து, பூண்டி ஏரியின் உபரிநீர் செல்லும் கொசஸ்தலை ஆற்றின் இரு கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை குடிநீர் ஏரிகளில், மற்றொரு ஏரியான புழல் ஏரி 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவும், 21.20 அடி உயரமும் கொண்டது. இந்த ஏரிக்கு, வடகிழக்கு பருவமழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து உள்ளது.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி, 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு, 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்இருப்பு 2,674 மில்லியன் கனஅடியாகவும், நீர்மட்ட உயரம் 18.33 அடியாகவும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து விநாடிக்கு 265 கன அடியாகவும் இருந்தது. இதையடுத்து, நேற்று காலை புழல் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதை நீர்வள ஆதாரத் துறையினர் நிறுத்தினர்.