பெங்களூரு: இஸ்லாமிய மாணவனை 'தீவிரவாதி' எனத் திட்டிய பேராசிரியர்; வீடியோவால் வெளிவந்த அதிர்ச்சி!

Spread the love

பெங்களூருவில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில், வகுப்பு நேரத்தில் இஸ்லாமிய மாணவர் ஒருவரை பேராசிரியர் ஒருவர் ‘தீவிரவாதி’ என்று திட்டி, மத ரீதியான வெறுப்புக்கருத்துக்களை உமிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரமான சம்பவம் வீடியோவாகப் பரவி, நாடு முழுவதும் பெரும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பேராசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அஃபான் என்ற மாணவர், வகுப்பறையை விட்டு வெளியே சென்று ஒருவரைச் சந்திக்க அனுமதி கேட்டபோதுதான் இந்த சர்ச்சை வெடித்துள்ளது. அப்போது, பேராசிரியர் முரளிதர் தேஷ்பாண்டே, அந்த மாணவரைப் பார்த்து, “உனக்கு வெக்கமா இல்லையா?” என்று இந்தியில் ஆக்ரோஷமாகக் கத்தியுள்ளார். தொடர்ந்து, “இன்று நான் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும் என எண்ணி வந்தேன்” என்று கூறிய அவர், அடுத்த கணமே மாணவரை நோக்கி “தீவிரவாதி” என்று கூறியது வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

பேராசிரியரின் சர்ச்சை, வெறுப்பு பேச்சு அத்துடன் நிற்கவில்லை. ஈரான் போருக்கு உன்னைப் போன்றவர்கள்தான் காரணம் என்றும், டொனால்ட் ட்ரம்ப் வந்து உன்னைக் கூட்டிச் செல்வார் என்றும், நீ நரகத்திற்குப் போவாய் என்றும் தொடர்ச்சியாக பேசியுள்ளார்.

வகுப்பில் இருந்த மற்றொரு மாணவர் இந்த முழு சம்பவத்தையும் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில பரவியதை அடுத்து, பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்தன.

Representation image
Representation image

கண்டனங்கள் வலுத்ததைத் தொடர்ந்து, சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்குப் பிறகு பேராசிரியர் முரளிதர் தேஷ்பாண்டே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். “மாணவர் புகார் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான விசாரணை நிலுவையில் இருப்பதால், நீங்கள் உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறீர்கள்” என்று துணைவேந்தர் கையொப்பமிட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து துணைவேந்தர் பேசுகையில் , “சம்பந்தப்பட்ட பேராசிரியர், பல ஆண்டுகளாக பகுதி நேர பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவர் இப்படி நடந்துகொண்டது ஆச்சரியமாக இருக்கிறது. வீடியோ பரவி வருகிறது, ஆனால் மாணவருடன் நடந்த பின்னணி உரையாடல் முழுமையாகத் தெரியவில்லை. பல்கலைக்கழக வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை. தேவையான ஒழுங்கு நடவடிக்கைகள் நிச்சயம் எடுக்கப்படும்,” என்று உறுதியளித்தார்.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மாணவருக்கு ஆதரவாகப் பேசிய மூன்று மாணவர்கள் வேறு சில காரணங்களைக் காட்டி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, பெயர் வெளியிட விரும்பாத மாணவர் ஒருவர் தனியார் ஊடகத்திடம் தெரிவித்தது இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI), இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. மேலும், பேராசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் பொது மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *