ஒரு ஆணின் பார்வையில், ஆண் எழுதும் எழுத்துக்களே பெரிதும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பெண்ணின் பார்வையும், கருத்தும், எழுத்தும் பதிவு செய்யப்படுவது அவசியமாகிறது.
அதற்கான ஒரு வெளியை உருவாக்க, பெண்களுக்காக பெண்களால் உருவாக்கப்பட்ட பதிப்பகம் தான் “Her stories”. பெண்ணெழுத்தின் ஆழத்தை அறிய, சென்னையில் நடந்துவரும் 49-வது புத்தக திருவிழாவில் “Her stories” அரங்கை பார்வையிட்டு, அங்கு மும்முரமாக வாசகர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த எழுத்தாளர் நிவேதிதா லூயிஸை சந்தித்து பேசினோம்.
“ஆண், பெண், திருநர் என அனைத்து பாலினரும் தொடர்ந்து எழுதி வந்தாலும், பொது வெளியில் ஆண்களின் பிரதிநிதித்துவமே அதிகமாக இருக்கிறது. ஒரு அழைப்பிதழில் கூட பெரும்பாலும் ஆண்களின் பெயர்களே இடம்பெறும். அப்படியான சூழலில், பெண்களுக்கென ஒரு வெளி தேவைப்படுகிறது.

Her Stories
நம் சமூகம் பாகுபாடு நிறைந்த சமூகமே. அனைவருக்கும் ஒரே மாதிரியான சூழலும், வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. குறிப்பாக ஆண்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் பெண்களுக்கும் திருநர் சமூகத்தினருக்கும் சமமாக கிடைப்பதில்லை. அதனால் புதிதாக எழுதத் தொடங்கும் பெண்களையும் திருநர்களையும் ஒரு கை பிடித்து வழிநடத்தும் பணியையே Her Stories செய்கிறது.
பெண் எழுதினாலே புலம்பல்கள், கவிதைகள், கதைகள், நாவல்கள் மட்டுமே எழுதுவார்கள்; அவர்களால் ஆய்வுகள் அல்லது ஆழ்ந்த கருத்துகளைக் கொண்ட படைப்புகளை எழுத முடியாது என்ற எண்ணமும் பரவலாக உள்ளது. அது உண்மை இல்லை. பெண்களால் பல்வேறு துறைகளைச் சார்ந்து எழுத முடியும்; ஆழமான கருத்துகளையும் முன்வைக்க முடியும்.