தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பது தொடர்பாக அரசியல் கட்சி, அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. மார்ச் 2-வது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் தொடங்கியுள்ள தவெக முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவது என தொகுதி தொடர்பாக சர்வே மேற்கொள்ளப்பட்டது. “விஜய்யின் ராசி மற்றும் பெயரின் முதல் எழுத்தான ‘வி’ சென்டிமென்ட் படி, விருகம்பாக்கம் அல்லது வேளச்சேரி தொகுதியில் நின்றால் வெற்றி பிரகாசமாக இருக்கும் என விஜயின் ஆஸ்தான கடலூர் ஜோதிடர் சந்திரசேகர் கணித்து கூறி இருந்தார்.
இதனிடையே, ஆதவ் அர்ஜுனா தனது ‘வாய்ஸ் ஆஃப் காமன்’ நிறுவனம் மூலம் பெரம்பூர் தொகுதியில் தான் களமிறங்க ஒரு சர்வே நடத்தினார். இந்தத் தொகுதியில் பட்டியலின மற்றும் வன்னியர் சமூகத்தினர் வாக்கு சரிபாதியாக உள்ளது. நடுத்தர குடும்பத்தினர் மற்றும் கூலித் தொழிலாளர்களின் வாக்குகள் இங்கே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. இதனால் பெரம்பூரில் விஜய் போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என ஆதவ் கணித்து சொல்லி இருந்தார்.
அதே நேரம் வேளச்சேரி தொகுதியை பொறுத்தவரை வன்னியர், முதலியார், சிறுபான்மையினர் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்ககூடிய சக்தியாக உள்ளன. தற்போது சிட்டிங் காங்கிரஸ் எம்எல்ஏ மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதை கணக்கில் வைத்து வேளச்சேரியை விஜய் குறி வைத்தார்.
அதே நேரம் தென்மாவட்ட மக்களின் ஆதிக்கம் நிறைந்த விருகம்பாக்கத்தில் நாடார், தேவர், பட்டியலினத்தவரின் வாக்குகள் அதிகம். சிட்டிங் திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜா மீது திமுக கடும் அதிருப்தியில் உள்ளது. அதனால் தேமுதிகவிற்கு இந்த தொகுதியை கொடுத்துவிடலாமா என திமுக யோசித்து வருகிறது. தேமுதிகவை எதிர்த்து போட்டியிட விஜய் யோசித்து வருகிறார்.
இதனால் மூன்று தொகுதிகளில் எதில் களமிறங்கினால் தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என விஜய் குழப்பத்தில் இருப்பதாக பனையூர் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
