பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு சீரற்ற இதயத் துடிப்பு – முதியவரின் உயிரை மீட்ட சிம்ஸ் மருத்துவமனை | sims hospital saved a man after two by pass

Spread the love

தொடர்ச்சியான சீரற்ற இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்த, ஐந்து நாட்களில் 250-க்கும் மேற்பட்ட முறை “டிஃபிபிரிலேட்டர்’ மின் அதிர்ச்சிகள் இந்நோயாளிக்கு தேவைப்பட்டன.

சமீபத்தில் அதிக ஆபத்தான இதயநாள பைபாஸ் சிகிச்சை இரண்டாவது முறையாக செய்யப்பட்டிருந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான இதயக் கீழறை மிகைத்துடிப்பு பிரச்சனைக்கு சிகிச்சையளிக்க சிக்கலான கதீட்டர் அப்லேஷன் செயல்முறையை மருத்துவர்கள் மேற்கொண்டனர். இந்த இரு சிகிச்சை செயல்முறைகளுமே தொழில்நுட்ப ரீதியில் அதிக சவாலானவை. 

சிக்கலான இரண்டாவது பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, உயிருக்கு ஆபத்தான சீரற்ற இதயத் துடிப்பால் (VT) பாதிக்கப்பட்ட 65 வயது முதியவரின் உயிரை சிம்ஸ் மருத்துவமனை காப்பாற்றியுள்ளது. இந்த அபாயகரமான துடிப்பைக் கட்டுப்படுத்த ஐந்து நாட்களில் சுமார் 250 முறை அவருக்கு மின் அதிர்ச்சிகள் அளிக்கப்பட்டன. பின்னர், இதயத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் செய்யப்பட்ட சிக்கலான ‘அப்லேஷன்’ சிகிச்சை மூலம் அவர் குணமடைந்தார். மீண்டும் பிரச்சினை வராமல் தடுக்க, ‘ஏஐசிடி’ (AICD) என்ற கருவியும் அவருக்குப் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நோயாளிக்கு 2012-ஆம் ஆண்டே வேறு மருத்துவமனையில் பைபாஸ் அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்தது. சமீபத்தில் அவருக்குத் தொடர் நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பரிசோதனையில், பழைய பைபாஸ் சிகிச்சையில் சரிசெய்யப்பட்ட இரத்தக் குழாய்கள் தற்போது செயலிழந்திருப்பதும், இதயத்தின் இரத்தத்தை உந்தித் தள்ளும் திறன் 27% ஆகக் குறைந்திருந்ததும் தெரியவந்தது. மேலும், இதயத்தின் குழாய்களில் பல அடைப்புகளும் இருந்தன.

இதயத்தின் இரத்த ஓட்டம் கடுமையாகக் குறைந்திருந்ததால், சிம்ஸ் மருத்துவமனையின் இதய சிகிச்சைப்பிரிவு இயக்குநர் டாக்டர் வி.வி. பாஷி தலைமையிலான மருத்துவக் குழுவினர், மிகவும் சவாலான இரண்டாவது பைபாஸ் அறுவை சிகிச்சையை இந்நோயாளிக்கு வெற்றிகரமாகச் செய்தனர்.

அறுவை சிகிச்சை முடிந்த 24 மணி நேரத்தில், நோயாளியின் இதயக் கீழறைகளில் இருந்து மிக வேகமான சீரற்ற இதயத்துடிப்பு ஏற்பட்டது. இது மருந்துகளுக்குக் கட்டுப்படவில்லை. வழக்கமாக இது 48 மணி நேரத்தில் சரியாகிவிடும்; ஆனால், இவருக்கு 5 நாட்களுக்கு மேலாகத் தொடர்ந்தது. ‘விடி ஸ்டார்ம்’ எனப்படும் இந்த ஆபத்தான நிலையைக் கட்டுப்படுத்த, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து நாளொன்றுக்கு 50 முறை வீதம் மொத்தம் 250 முறை மின் அதிர்ச்சிகள் அளித்து மருத்துவர்கள் அவர் உயிரைக் காப்பாற்றியிருக்கின்றனர்.

நவீன ‘அப்லேஷன்’ சிகிச்சை: இதனைத் தொடர்ந்து, எலக்ட்ரோபிசியாலஜி பிரிவுத் தலைவர் டாக்டர் சஞ்சய் பி.வி. தலைமையிலான குழுவினர், சீரற்ற மின் சிக்னல்களைக் கண்டறிந்து சரிசெய்யும் ‘அப்லேஷன்’ சிகிச்சையை மேற்கொண்டனர். நுண்-துளை மூலம் குறைந்த ஊடுருவல் முறையில் இதயத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பிரச்சினை முழுமையாகச் சரிசெய்யப்பட்டது.

சிகிச்சைக்குப் பிறகு, நோயாளி 15 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவு உட்பட ஒரு மாதம் மருத்துவமனையில் தங்கி குணமடைந்தார். திடீர் மாரடைப்பு எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க ஒரு மாதம் கழித்து, அவருக்கு ‘ஏஐசிடி’ (AICD) கருவி பொருத்தப்பட்டது. இது இதயத் துடிப்பைக் கண்காணித்து, சீரற்ற துடிப்பு ஏற்பட்டால் தானாகவே மின் அதிர்ச்சியை வழங்கி பாதுகாக்கும். தற்போது அவர் முழு நலமுடன் உள்ளார்.

டாக்டர் வி.வி. பாஷி கூறுகையில், “இதயம் பலவீனமாக உள்ளவர்களுக்கு இரண்டாவது முறையாக பைபாஸ் சிகிச்சை செய்வது மிகவும் சிக்கலானது. அதற்கு பிறகு சீரற்ற இதயத்துடிப்பு தொடர்ச்சியாக இருந்த பிரச்சனைக்கு 5 நாட்களில் 250 முறை மின் அதிர்ச்சிகள் அளிக்கப்பட்டு ஒரு நோயாளி முழுமையாகக் குணமடைந்திருப்பதை நான் காண்பது, எனது 45 வருட மருத்துவ அனுபவத்தில், இதுவே முதல்முறை” என்றார்.

டாக்டர் சஞ்சய் கூறுகையில், “அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்பட்ட உயிருக்கு ஆபத்தான ‘விடி ஸ்டார்ம்’ பாதிப்பை, நவீன 3D மேப்பிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இதயத்தின் இருபுறமும் சிகிச்சை அளித்ததன் மூலம் வெற்றிகரமாகச் சரிசெய்தோம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *