சென்னை: ‘பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்களுக்கு வைப்புத்தொகை நிர்ணயிப்பதைத் தவிர்க்க வேண்டும்’ என்று திமுககூட்டணி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
தமிழகத்தில் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்கள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்ட முடிவில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூறியதாவது:
ஆர்.எஸ்.பாரதி (திமுக): ஆயுதங்கள் இல்லாமல் அமைதியாக கூடும் உரிமை அனைவருக்கும் உள்ளது. ரோடு ஷோ நிகழ்வுகள், பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக எந்த கட்டுப்பாடுகள் விதித்தாலும் அடிப்படை உரிமைகளை மீறாமல் இருக்க வேண்டும். வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்ட பின், ஏதேனும் மாற்றம் இருந்தால் திருத்தப்படும்.
டி.ஜெயக்குமார் (அதிமுக): அரசின் பரிந்துரைகள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். கூட்டம், ஆர்ப்பாட்டம், நிகழ்ச்சி நடக்கும்
போது 5 ஆயிரம் முதல் 1 லட்சம்வரை கூடுவார்கள். அதை கண்காணிக்க தாலுகா அளவில், மாவட்ட அளவில் ஒரு கமிட்டி போடப்பட்டு, கண்காணிப்பது முக்கியம். பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை. அதை தடை செய்யக்கூடாது.
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): பொதுக்கூட்டத்துக்கு வைப்புத் தொகை முறையை அகற்ற வேண்டும். சிறுசிறு இயக்கங்கள், கட்சிகள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டும் என்றால் இதனை எப்படி ஏற்க முடியும். பொதுக்கூட்டங்கள், பரப்புரைகள், ரோடு ஷோக்கள் நடத்தும்போது ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களுக்கு அந்தந்த கட்சிகள் பொறுப்பேற்க வேண்டும்.
கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): அரசின் வரைவு அறிக்கை மக்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. உயர் நீதிமன்றம் சொல்லியதற்காக அரசியல் கட்சிகளிடம் வைப்புத் தொகை கேட்பது, வழிமுறைகள், கட்டுப்பாடுகள் விதிப்பது எல்லாம் காலம்காலமாக போராடி பெற்றுள்ள ஜனநாயக உரிமைகளை பறிப்பதாக அமைந்துவிடும்.
மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): ஒரு கூட்டத்தையோ, மாநாட்டையோ நடத்த வேண்டும் என்றால் வைப்பு தொகையுடன் நடத்த வேண்டும். ஏதாவது இழப்பு ஏற்பட்டால் அதனை அரசியல் கட்சிகள் ஏற்க வேண்டும் என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தை இழுத்து மூடக்கூடிய செயலாகும்.
சிந்தனை செல்வன் (விசிக): 50 ஆயிரம் பேர் கூடினால் ரூ.20 லட்சம் வைப்பு தொகை வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கடுமையான விதிமுறைகள் பெரும் அதிர்ச்சியை தருகிறது. ஜனநாயக நடைமுறைகளை தடுக்கின்ற வகையில், காவல்துறை ஆட்சி என்ற வகையில் தடுமாறி போய்விடக்கூடாது. தமிழகத்தில் ரோடு ஷோ முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும்.
ஜவாஹிருல்லா (மமக): கரூர் நிகழ்வை வைத்துக்கொண்டு ஜனநாயக ரீதியாக செயல்படக்கூடிய அனைத்து கட்சிகளுக்கும் வைப்புத் தொகையை வசூலிப்பது சரியல்ல. ரோடு ஷோ முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும்
மவுரியா (மநீம): வைப்புத்தொகை மிகவும் அதிகமாக உள்ளதால் சாதாரண கட்சிகள் கட்டமுடியாது. எங்களை பொறுத்த வரையில் கூட்டத்தை நடத்தும்போது அந்த நிகழ்ச்சியில் நடக்கும் தவறு உள்ளிட்ட அனைத்துக்கும் அந்தக் கட்சியே தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், தி.வேல்முருகன் (தவாக), அபுபக்கர் (ஐயுஎம்எல்) உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இதேபோன்ற கருத்துகளையே வலியுறுத்தினர்.