சென்னை: பொதுத் துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அறிவிப்புகள் அனைத்தையும் துரிதமாக முடித்து, மக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டுவர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தலைமைச்செயலகத்தில் முதல்வர் தலைமையில் நேற்று, பொது மற்றும் மறுவாழ்வுத் துறை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும், வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பொது மற்றும் மறுவாழ்வுத்துறை ஆய்வுக் கூட்டத்திலஅயல்நாடுகளில், வெளிமாநிலங்களில் பணிக்குச் சென்று அங்கு எதிர்பாராதவிதமாக இறக்கும் தமிழர்களின் குடும்பத்துக்கு மாத ஓய்வூதியம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
மேலும் 2021-22 முதல் 2025-26 வரை பொது மற்றும் மறுவாழ்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட 90 அறிவிப்புகளில், 68 அறிவிப்புகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், முடிவுறும் தருவாயில் உள்ள ஏனைய அறிவிப்புகள் தொடர்பான பணி களை விரைந்து நிறைவேற்ற முதல்வர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து சுற்றுச்சூழல், வனத்துறை குறித்த ஆய்வின்போது, முதல்வரின் பசுமை புத்தாய்வு திட்டம், பசுமை தமிழ்நாடு இயக்கம், வனவிலங்குகளுக்கான அவசர சிகிச்சை மற்றும் மறுவாழ்வு தேவைகளுக்கென 3 உயர் வனவிலங்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் திருச்சியில் அமைப்பது குறித்தும் சென்னைக்கு அருகில் தாவரவியல் பூங்கா அமைப்பது குறித்தும், மரக்காணத்தில் பன்னாட்டுப் பறவைகள் மையம், போன்ற பல்வேறு அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
இந்த இரு துறைகளின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் அனைத்தையும் துரிதமாக முடித்து, மக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச்செயலர் நா.முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.