சென்னை: போக்குவரத்துத் துறை அமைச்சரின் உறுதிமொழியை ஏற்று, போக்குவரத்து ஊழியர்களின் 62 நாள் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஆகியன சார்பில் ஆக.18-ம் தேதி முதல் தமிழ கத்தின் 22 மையங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று முன்தினம், சிஐடியு நிர்வாகிகள் அ.சவுந்தரராசன், கே.ஆறுமுக நயினார், தயானந்தம், கே.அன்பழகன், குணசேகரன், எஸ்.நடராஜனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில், ஓய்வுபெற்றோரின் 17 மாத ஓய்வுகாலப் பலன்கள் 2 தவணைகளில் பொங்கலுக்கு முன்பு வழங்கப்படும். 15-வது ஊதிய ஒப்பந்த நிலுவைத் தொகையின் முதல் தவணை விரைவில் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அமைச்சர் அளித்தார். இதையடுத்து 62 நாட்களாக நடைபெற்ற போராட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
இதுதொடர்பாக அ.சவுந்தரராசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற பொறுப்புணர்ச்சியோடு தொழிற்சங்கங்கள் அரசுக்கு காலஅவகாசம் தருகிறோம். போராட்டத்தில் இதர சங்கங்கள் பங்கேற்காதது வருத்தமளிக்கிறது. அரசியல், நிர்ப்பந்தம், ஆதாயம் காரணமாகக் கூட வராமல் இருந்திருக்கலாம். ஆனால், மனப்பூர்வமாக ஆதரவு தெரிவித்தார்கள்” என்றார்.