சென்னை: போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுடன் கூடிய ஓய்வூதியம் இன்று வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
போக்குவரத்துக் கழகங்களைப் பொறுத்தவரை குடும்ப ஓய்வூதியம் பெறும் 20 ஆயிரம் பேர் உள்பட சுமார் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இறுதியாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஒவ்வொரு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி அளிக்கும்போதும், ஓய்வூதியர்களுக்கு அந்த பலன் கிடைப்பதில்லை. இது தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்களை ஓய்வூதியர்கள் முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில், அண்மையில் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி, 119 சதவீதத்துடன் அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டவர்களுக்கு கூடுதலாக 27 சதவீதமும், 5 சதவீதம் அகவிலைப்படி பெறுவோருக்கு கூடுதலாக 9 சதவீதமும் உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் குறைந்தபட்சமாக ரூ.1,300, அதிகபட்சமாக ரூ.4,000 வரை ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வுடன் கூடிய தொகை இன்று ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இது தொடர்பாக ஓய்வூதியர்கள் சங்கத்தினர் கூறும்போது, “246 சதவீதம் அகவிலைப்படி பெற வேண்டியோருக்கு 146 சதவீதமும், 48 சதவீதம் பெற வேண்டியோருக்கு 14 சதவீதம் மட்டுமே இடைக்கால நிவாரணமாக அரசு வழங்கியுள்ளது. மீதமுள்ள தொகையையும் விரைந்து வழங்க வேண்டும்” என்றனர்.