சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரருக்கு ஜாமீன் கோரி தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, அவரை அமலாக்கத்துறையும் கடந்தாண்டு ஜூன் 26-ல் கைது செய்தது. இந்த வழக்கில் அவரது சகோதரர் முகமது சலீமையும் அமலாக்கத்துறை கடந்தாண்டு ஆகஸ்டில் கைது செய்தது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுவை ஏற்கெனவே சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி சுந்தர் மோகன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக பதிலளிக்க அவகாசம் வேண்டுமென அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் கோரினார். அதையடுத்து, இதுதொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வரும் பிப்.21-க்கு தள்ளி வைத்துள்ளார்.