தஞ்சாவூரைச் சேர்ந்தவர் கேபிள் செந்தில் என்கிற செந்தில்குமார். இவர் அதிமுக-வில் தஞ்சாவூர் மத்திய மாவட்ட அம்மா பேரவை மாவட்டத் தலைவராக இருக்கிறார்.
தஞ்சாவூர், பால்பண்ணை ரஹ்மான் நகரைச் சேர்ந்தவர் ஷேக் சிராஜூதீன். சிங்கப்பூர் தொழிலதிபரான இவருக்கு தஞ்சாவூர், செங்கிப்பட்டி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பல கோடி மதிப்புடைய சொத்துக்கள் இருந்தது.
இந்நிலையில் 2015ல் ஷேக் சிராஜூதீன் இறந்து விட, அவரது மனைவி முகமதா பேகம்(76) சொத்துக்களை கவனித்து வந்துள்ளார். இதைதொடர்ந்து, தஞ்சாவூர் பால்ப்பண்ணை அருகே சிராஜ்பூர் நகர் என்ற பெயரில் வீட்டு மனைகள் போட்டு விற்பனை செய்ததில் செந்தில் தரப்புக்கும், முகமதா பேகத்திற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் முகமதா பேகம் சிங்கப்பூர் சென்று விட, தன் பெயரிலான சொத்துக்களை பராமரிப்பதற்குறிய பவரை செந்திலிடம் கொடுத்தார் என்கிறார்கள்.

பின்னர், போலி ஆவணங்கள் மூலம் ரூ.800 கோடி மதிப்பிலான சொத்துக்களை தன்னிடம் இருந்து அபகரித்து விட்டதாக முகமதா பேகம், செந்தில் உள்ளிட்டோர் மீது தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன் பேரில் கேபிள் செந்தில், பிரகாஷ், ரேவதி, பாஸ்கரன், நாகராஜன், பெட்ரிஷியா ஜோனி, ஸ்ரீவித்யா சுமதி, செல்லப்பன், மணிகண்டன், ஆதித்யா, கவிதா, சுஜாதா ஆகிய 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.