தமிழக பா. ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்ப்பிணிப் பெண்கள்
கர்ப்பிணிப் பெண்கள் நலனுக்காக, மத்திய அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வரும் மாத்ரு வந்தனா திட்டம் மற்றும் தமிழகத்தில் 1987 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டம் ஆகியவற்றின் மூலம், மத்திய அரசின் நிதியுதவியுடன், தமிழகக் கர்ப்பிணிப் பெண்களுக்கு, ஐந்து தவணைகளாக ரூ.14,000 மற்றும் ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்துப் பெட்டகமும் வழங்கப்பட்டு வருகிறது.
திமுக அரசு, ஏற்கனவே இரண்டு ஆண்டுகளாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவி வழங்காமல் இருந்ததைக் கண்டித்து, தமிழக பா.ஜனதா கட்சிசார்பாக, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிக்கை வெளியிட்டிருந்தோம்.
நிதி எங்கே செல்கிறது
இந்த நிலையில், தற்போது மூன்று ஆண்டுகள் கடந்தும், சுமார் 2 லட்சம் கர்ப்பிணிப் பெண்களுக்கு இன்னும் நிதியுதவி வழங்கப்படவில்லை என்று செய்திகள் வெளிவந்துள்ளன. மாத்ரு வந்தனா திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு வரை, மத்திய அரசு, தமிழகத்துக்கு ரூ.257 கோடி நிதி வழங்கியுள்ளது.
தமிழகச் சகோதரிகள் மகப்பேறு நலனுக்காக வழங்கப்பட்ட நிதியை, மூன்று ஆண்டுகளாக அவர்களுக்கு வழங்காமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக மக்கள் நலனுக்காக மத்திய அரசு திட்டங்கள் மூலம் வழங்கப்படும் நிதி, மக்களைச் சென்றடைவதில்லை என்றால், இந்த நிதி எங்கே சென்றது என்பதைத் திமுக அரசு விளக்க வேண்டும்.
உடனடியாக, நிதியுதவி கிடைக்காமல் இருக்கும் அனைவருக்கும், இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய நிதியை வழங்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.