தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், கோவி.செழியன், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கு உதயநிதியை வரவேற்கும் விதமாக சாலையின் ஒரு பகுதியை இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாழை மரங்கள் மற்றும் கரும்பால் அலங்காரம் செய்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்தும் முடியாமலும் வாழைத்தார் மற்றும் கரும்பை பலர் எடுத்துச் சென்றனர்.
இதில் உதயநிதி பேசியதாவது, “‘பட்டுக்கோட்டை மிக நீண்ட பாரம்பர்யம் கொண்ட ஊர். மிக வேகமாக வளர்ந்து வரும் நகராட்சியாகத் திகழ்கிறது.

உதயநிதி
ஆனால், இந்த நகரத்தின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கின்ற வகையில் ஒரு பேருந்து நிலையம் இல்லை. திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, இந்நகரின் வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அதற்கு ஒரு உதாரணம்தான் இந்தப் பேருந்து நிலையம்.
இந்நகரின் எதிர்கால வளர்ச்சியைக் கருதி, இந்தப் பேருந்து நிலையம் தாராளமான இட வசதியோடு, அதிநவீனமான கட்டமைப்பு வசதிகளோடு கட்டப்பட்டுள்ளது. தமிழக முதல்வரைப் பொறுத்தவரைக்கும், “எல்லா ஊருக்கும் எல்லாம்” என்ற கொள்கையில் அனைத்து ஊர்களிலும் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.