மகா(ன்)பிரசாதம்: கோலம் ஏன் போடணும்?
-ஜெயாப்ரியன்
வேத சாஸ்த்ரங்கள் எதையும் காரணமோ காரியமோ இல்லாம சொல்றதில்லை. ஆனா, அதைத் தெரிஞ்சுக்காததாலதான் பலரும் கடைபிடிக்கம விட்டு, காலப்போக்குல அப்படியே மறந்துடறா.
உதாரணமா எடுத்துண்டா, வாசல் பெருக்கி கோலம் போடறதைச் சொல்லலாம்.
மேலாகப் பார்த்தா, சாணமிட்டு மெழுகறது, கிருமிகளை அண்டவிடாது. அதோட வாசல் சுத்தமா இருந்தா அகத்துக்கு (வீட்டுக்கு) உள்ளேயும் சுத்தமா இருக்கும், லட்சுமி கடாட்சம்னு வைச்சுக்கலாம்.
அரிசிமாவுல போடற கோலத்தை எறும்புகள் தீனியா உபயோகிச்சுக்கும். அது, ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்யறதுக்கு சமானம்.
இதெல்லாம் பொதுவாவே நான் பலசமயம் சொல்லிண்டு வர்றதுதான். ஆனா, யாரும் கடைபிடிக்கறாப்புல தெரியலை.
சரி, மேலே சொன்னதெல்லாம் மட்டும்தான் சாஸ்திரங்கள், கோலம்போடு, கோலம்போடுன்னு சொல்றதுக்கு காரணமான்னு பார்த்தா, அதையெல்லாம் விட பெரிய காரணம் இருக்கு.
அது, நம்மை எல்லாம் ஜனிச்சதுல (பிறந்ததுல) இருந்து, மரிக்கற மட்டும் சுமந்துண்டே இருக்கறவ பூமாதேவி.
தாயார்க்காரிகூட குழந்தையைப் பத்து மாசம்தான் சுமப்பா. அதுக்கப்புறம் தூக்கிண்டாலும் கைவலிக்கறச்சே இறக்கி விட்டுடுவா. ஆனா, பூமாதேவி நம்மை எப்போதும் சுமந்துண்டே இருக்கா.
அப்படி சதா சர்வ காலமும் நம்மை சுமந்துண்டே இருக்கற பூமாதேவிக்கு நன்றி தெரிவிச்சு செய்யற ஆரதனைதான் கோலம்போடறது.
யாகம் பண்றதுக்கு முன்னால, விவாஹம் நடத்தறதுக்கு முன்னால எல்லாம் கோலம் போடச் சொன்னதும், அந்த அக்னி கார்யத்தையெல்லாம் தாங்கிண்டு பொறுமையா இருக்காளே, பூமாதா, அவளுக்கு நன்றி சொல்றதுக்குதான்.
புரிஞ்சுண்டு இனிமேலாவது தினமும் கோலம்போடறச்சே பூமாதேவியை நினைச்சுண்டு போடுங்கோ. புண்ணியம் கிடைக்கும்.
(பிரசாதம் மணக்கும்)
