மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் அருகே ஆசாதண்டா என்ற கிராமத்தின் வெளியே, ஒரு கார் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.
இது குறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து தீயை அணைத்து, கார் கதவைத் திறந்து பார்த்தபோது, உள்ளே ஒரு சாக்குமூட்டை எரிந்த நிலையில் இருந்தது.
அதனைத் திறந்து பார்த்தபோது, உள்ளே ஒருவர் எரிந்த நிலையில் இறந்திருந்தார். இது குறித்து போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் கணேஷ் சவான் என்று தெரிய வந்துள்ளது.
கணேஷ் சவான் நேற்று காலை முதல் காணாமல் போயிருந்தார். அவரது போன் ஆஃப் செய்யப்பட்டிருந்தது என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், “நள்ளிரவு 12 மணியளவில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் எங்களுக்கு தகவல் கொடுத்தனர். நாங்கள் விரைந்து வந்து தீயை அணைத்துப் பார்த்தபோது, உள்ளே சாக்குமூட்டையில் கணேஷ் சவான் இறந்து கிடந்தார்” என்று போலீஸார் தெரிவித்தனர்.
யாரோ மர்ம நபர்கள் கணேஷ் சவானை கடத்தி வந்து, சாக்குமூட்டையில் கட்டி காருக்குள் போட்டுள்ளனர். சாக்குமூட்டையை காரின் டிரைவர் இருக்கையில் வைத்துவிட்டு காருக்கு தீ வைத்துள்ளனர். இதனால் காரில் இருந்த நபர் உயிரோடு தீயில் கருகி இறந்து போனார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
கணேஷ் சவான் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் கடன் வசூலிப்பு ஏஜென்டாக வேலை செய்து வந்தார். அவரைக் கொலை செய்த நபர்கள் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்