அரசியல் தலைவர்களின் வாரிசுகளுக்கு ஷாக்
இத்தேர்தலில் போட்டியிட்ட பெரும்பாலான அரசியல் தலைவர்களின் வாரிசுகள் படுதோல்வியைச் சந்தித்தனர். பர்பானி மாவட்டத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் சுரேஷ் வர்புட்கரின் மகன், மருமகள், மகள் என மூன்று பேர் போட்டியிட்டனர்.
இதில் மகன், மருமகள் பா.ஜ.க சார்பாகவும், மகள் சிவசேனா(உத்தவ்) சார்பாகவும் போட்டியிட்டனர். ஆனால் மூன்று பேருமே தோல்வியைத் தழுவினர். சுரேஷ் கடந்த ஆண்டுதான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்தார்.
இது தவிர மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெயகுமாரின் சகோதரர் அருண் மற்றும் மைத்துனி பாரதி கோரே, தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) எம்.எல்.ஏ உத்தம் ஜன்கர் மகன் ஜீவன், சோலாப்பூர் பா.ஜ.க மூத்த தலைவர் தீபக் சாலுக்கேயின் மகன் யஷ்ராஜ் ஆகியோரும் தோல்வியைத் தழுவினர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சோலாப்பூர் மாவட்டத் தலைவர் உமேஷ் பாட்டீல், அவரது சகோதரர் சந்தோஷ் ஆகியோரும் தோல்வியைச் சந்தித்தனர். மகாராஷ்டிராவின் சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் நரேந்திர பாட்டீல் தனது மனைவியை வேட்பாளராக நிறுத்தினார்.
அவரும் வெறும் 22 வயதான சிவசேனா வேட்பாளர் மிருணாள் மகேஷ் பாட்டீலிடம் தோல்வியடைந்தார்.
பாஜகவின் சரத் லாடின் மனைவி தனஸ்ரீ லாட், காங்கிரஸ் எம்எல்ஏ விஸ்வஜீத் கதமின் மருமகனான காங்கிரஸ் வேட்பாளர் ரிஷிகேஷ் லாடால் தோற்கடிக்கப்பட்டார்.
மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பிரகாஷ் அபித்கரின் மைத்துனி ரோகிணி அபித்கர், அமைச்சர் பரத் கோகாவலேவின் மகன் விகாஸ், பாஜக சட்டமன்ற உறுப்பினர் சத்யஜீத் தேஷ்முக்கின் மகள் சாய் தேஜஸ்வி தேஷ்முக் ஆகியோர் ஜில்லா பரிஷத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
சாய் தேஜஸ்வி அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவர், மாநில சட்ட மேலவையின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மறைந்த சிவாஜிராவ் தேஷ்முக்கின் பேத்தி ஆவார்.