மகாராஷ்டிரா முழுவதும் இருக்கும் மாநகராட்சிகளுக்கு வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் ஆளும் பா.ஜ.க மற்றும் சிவசேனா(ஷிண்டே) கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.
அதே சமயம் இதே கூட்டணியில் இருக்கும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. எதிர்க்கட்சிக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் மும்பையில் தனித்துப் போட்டியிடுகிறது.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.
ஆனால் புனேயில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இரண்டு நாட்களாகக் குழப்பம் நிலவி வந்தது. அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.

இரண்டு நாட்கள் நடந்த பேச்சுவார்த்தையில் சரத்பவார் கட்சிக்கு 35 இடங்கள் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், அதேசமயம் அந்த வேட்பாளர்கள் தங்களது கடிகாரச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் அஜித்பவார் கறார் காட்டினார். இதையடுத்து கூட்டணி வேண்டாம் என்று சரத்பவார் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
இதையடுத்து நேற்று இரவு எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா (உத்தவ்), காங்கிரஸ் மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்துப் பேசினர். இந்தப் பேச்சுவார்த்தை நீண்ட நேரம் நீடித்தது. இதில் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி கூட்டணி புனேயில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.