திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தச்சங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் பி.இ பட்டதாரியான நித்திஸ். இவர், கடந்த 4 வருடமாக செம்மறி ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தச்சங்குறிச்சி பகுதியில் மேய்ச்சல் குறைவாக இருப்பதால், அருகே உள்ள நெய்க்குளம் பகுதியில் மேய்ச்சலுக்காக 250 செம்மறி ஆடுகளை தச்சங்குறிச்சியில் இருந்து சிறுகனூர் செல்ல சாலையில் ஓட்டிச் சென்றார்.
அப்போது, அந்த வழியாக இரண்டு டிப்பருடன் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டர் ஆடுகள் மீது மோதியது. இதில், 81 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானது. மேலும், 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயமடைந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த காணக்கிளியநல்லூர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.