`மதுரைக்கு மெட்ரோ ரயில், எய்ம்ஸ் மருத்துவமனையெல்லாம் அதிமுக ஆட்சியில்தான் வரும்!’- ராஜன் செல்லப்பா

Spread the love

மதுரை அவனியாபுரத்தில் அதிமுக 54 ஆம் ஆண்டுவிழாவை முன்னிட்டு கிழக்கு மாவட்டத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அதிமுக அமைப்புச் செயலாளரும், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா பேசும்போது, “திமுக செயலாளர் சுட்டுக் கொல்லப்பட்டும், திமுக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு என ஒரே நாளில் பல செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.

திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயிலில் ரோப் கார் அமைக்க கடந்த ஆண்டு 23 கோடி ஒதுக்கப்பட்டும் வேலைகள் இன்னும் நடைபெறவில்லை.

மதுரை வரும் முதலமைச்சர், ஒரு லட்சம் பேருக்கு பட்டா கொடுக்கப் போகிறாராம், முதலில் நீண்டகாலமாக பட்டா இல்லாத இப்பகுதி மக்களுக்கு பட்டா கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு கொடுங்கள்.

மெட்ரோ ரயில் திட்டம் வராததற்கு யார் காரணம்? விரிவான திட்ட அறிக்கையில் சரியான தகவலை கொடுத்திருந்தால் மெட்ரோ திட்டம் மதுரைக்கு வந்திருக்கும், மத்திய அரசு கூடுதல் தகவல் கேட்டு அறிக்கையை திருப்பி அனுப்பி உள்ளது. அதிமுக ஆட்சி வந்த பின்னர் மதுரையில் மெட்ரோ திட்டம் வந்தே தீரும், சந்தேகம் வேண்டாம்.

எய்ம்ஸ் மருத்துவமனை திருப்பரங்குன்றம் தொகுதியில்தான் வருகிறது, மூன்றாண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னேன், ஆனால் ஆளுகின்ற வாய்ப்பு இழந்துவிட்டதால், அதற்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். எடப்பாடி முதலமைச்சராக வந்த பிறகுதான் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படும்.

இன்னும் இரண்டு மாதங்களில் விடுபட்ட மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க போகிறார்களா? இன்னும் சில மாதங்களில் ஆட்சி முடிவடையப் போகிறது, அப்புறம் எந்த அதிகாரத்தையும் பயன்படுத்த முடியாது. காவல்துறையை மிரட்ட முடியாது, பொய் வழக்கு போட முடியாது, மோசமான திமுக அரசுக்கு முடிவு காலம் வந்துவிட்டது.

திமுக ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சி பீடத்தில் இருந்ததாக வரலாறு இல்லை ஆனால், அதிமுக தொடர்ந்து ஆட்சியில் இருந்துள்ளது. திமுகவிடம் நிர்வாகத் திறமையில்லை, போட்டோ சூட் மட்டும் எடுக்கிறார்கள். முதல்வர் பாதுகாப்புடன் நடுரோட்டில் செல்கிறார், ரெடிமேடாக பத்து கல்லூரிப் பெண்களை வரவழைத்து வணக்கத்தை போட்டுக்கொண்டு செல்கிறார், மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதே அவருக்கு தெரியவில்லை.

பெண்களுக்கு இலவச பேருந்து என்றார்கள், பல இடங்களில் பேருந்தே ஓடவில்லை, 10 பேருந்துதான் மதுரையில் ஓடுகிறது, அதுவும் ஓட்டை பேருந்தாக உள்ளது.

தயவுசெய்து இந்த வாரத்திற்குள் எஸ்.ஐ.ஆர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து விடுங்கள், எங்கள் நிர்வாகிகள் அதற்கு உதவி பண்ணுவார்கள். சாதாரணமாகவே திமுக-காரர்கள் மக்களை மதிக்க மாட்டார்கள், அதிலும் ஓட்டு இல்லையென்றால் கொஞ்சமும் மதிக்க மாட்டார்கள்.

திமுக தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மாதம்தோறும் உதவித் தொகை கொடுப்போம் என்றார்கள், கொடுத்தார்களா? உள்ளூர் மாடுகளை மதிப்பதில்லை, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியின்போது உள்ளூர்காரர்களுக்கு டோக்கன் கொடுப்பதில்லை. இதற்கெல்லாம் முடிவு கட்ட அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *