தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விக்கிரவாண்டியில் நடத்திய மாநாட்டில் ரேம்ப் வாக்கில் நடந்து செல்லும்போது, அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் கட்சித் துண்டுகளை அவருக்குக் கொடுத்து அதை அணிந்து கொண்டு நடந்த நிகழ்வு டிரெண்டிங் ஆனது. அதைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமையன்று மதுரையில் நடந்த தி.மு.க-வின் தெற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பொதுக்கூட்ட அரங்கிற்குள் ஸ்டாலின் வந்தபோது நிர்வாகிகளுடன் சேர்ந்து அமைச்சர்களும் கட்சித் துண்டுகளைச் சுழற்றியும், ஸ்டாலினை நோக்கி வீசியும் அவரை வரவேற்றனர்.
அதுவும் டிரெண்ட் ஆனது. அந்த வரிசையில் தற்போது அ.தி.மு.க-வினரும் இந்த டிரெண்டிற்குள் இணைய இருக்கின்றனர்.
மதுரையில் மார்ச் 1 ஆம் தேதி நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இந்த பொதுக்கூட்டம் குறித்து, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்ட அ.தி.மு.க சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரை எல்லீஸ் நகர்ப் பகுதியில் நடைபெற்றது.
இதில் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் இரா.விசுவநாதன் ஆகியோர் பங்கேற்று ஆலோசனை வழங்கினர். ஆலோசனைக் கூட்டத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மதுரை புறநகர் அ.தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

இந்தக் கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேசுகையில், “வருகின்ற 2026 தேர்தலுக்காக மதுரை மண்ணில் பரப்புரை ஆற்ற பிரதமர் மோடியும் , எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் வருகை தரவுள்ளனர். இந்த மதுரை பொதுக்கூட்டம் வெற்றி விழா கூட்டமாக மாற்றவேண்டும். இதில் இரு பெரும் தலைவர்கள் ( மோடி – இபிஎஸ்) பேசக்கூடியவை ஆளுங்கட்சியைக் கலங்கடிக்கச் செய்யும்.
எனவே தொண்டர்களை கடைசி வரை கூட்டத்தில் அமர வைக்க வேண்டும். அனைவரும் அ.தி.மு.க கட்சித் துண்டை அணிந்து வரவேண்டும். நமது கூட்டணிக் கட்சியினர் வருவார்கள். அவர்கள், அவர்களது கட்சித் துண்டை அணிந்துவருவார்கள். அதேபோல் நாமும் நமது அ.தி.மு.க துண்டை அணிந்துவர வேண்டும்.

அதேபோல் தலைவர்கள் வரும்போது தலைக்கு மேல் துண்டைச் சுழற்றிக் காட்ட வேண்டும். மதுரையில் நடைபெறும் கூட்டம் வெற்றிக் கூட்டமாக நடைபெற வேண்டும்” என்றார்.