அறிவொளி ஏற்ற வேண்டிய பள்ளிக்கூடமே, சட்டவிரோத மதுபானங்களைக் குவித்து வைக்கும் கிடங்காக மாறிய அவலம், பீகாரில் அரங்கேறியுள்ளது. அரசுப் பள்ளி ஒன்றில் 4ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவன் மது அருந்தி மயங்கி விழுந்த சம்பவம், மாநிலத்தின் மதுவிலக்கு அமலாக்கத்தின் லட்சணத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
பீகாரின் மோதிஹாரியில் கள்ளச்சாராயத்துக்கு 11 பேர் பலியான சோகத்தின் வடுக்கள் ஆறுவதற்குள், பெகுசராயில் நடந்தேறியுள்ள இந்த நிகழ்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முழு மதுவிலக்கு அமலில் உள்ள ஒரு மாநிலத்தில், குழந்தைகளின் பாதுகாப்பு அரணாக விளங்க வேண்டிய பள்ளிக்கூட வளாகத்திலேயே மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது எப்படி? இந்தக் கேள்விதான் இன்று ஒவ்வொரு பெற்றோரையும் குடைந்து கொண்டிருக்கிறது.

சம்பவம் வெளிவந்தது எப்படி?
பள்ளியிலிருந்து வீடு திரும்பிய 4ஆம் வகுப்பு மாணவனின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தெரிந்தது. தள்ளாடிய நடை, மதுவின் நெடி! பதறிப்போன பெற்றோர், அவனது நண்பர்களிடம் விசாரித்தபோதுதான் அந்த நெஞ்சை உலுக்கும் உண்மை வெளிவந்துள்ளது. பள்ளியின் பூட்டப்பட்ட கழிவறை அருகே மதுபான பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
சிறிது நேரத்திலேயே அந்த மாணவனின் உடல்நிலை மோசமடைந்து, மயங்கி விழுந்துள்ளான். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது நலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலையடுத்து, கொதித்தெழுந்த பெற்றோரும், உள்ளூர் மக்களும் பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியரிடம் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து, பள்ளியில் உள்ள பாழடைந்த கழிவறைப் பகுதியைச் சோதனையிட்டபோது, அட்டைப்பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான மதுபானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.