ஈரோடு: மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் மது விற்பனையை அதிகரிக்க அரசு எந்த கூடுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆண்டுதோறும் மது விற்பனை அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்காக அரசு தனி முயற்சி எடுப்பதில்லை. மாறாக, மதுக் கடைகளை படிப்படியாக மூடும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.
மது பாட்டிலுக்காக வாங்கப்படும் ரூ.10 அரசின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. அந்தப் பணத்தை தவறாகப் பயன்படுத்த முடியாது. நீதிமன்ற உத்தரவுப்படி தான் மது பாட்டில்களுக்கு வைப்புத்தொகை பெறப்படுகிறது. ஆனால், கூடுதலாக 10 ரூபாய் பெறப்படுவதாக தவறாக சித்தரிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.