ஏர் இந்தியா விமானத்தில் தனக்கு உடைந்த இருக்கை ஒதுக்கப்பட்டிருந்ததாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் ஏர் இந்தியா விமானத்தில் போபாலில் இருந்து தலைநகர் தில்லிக்கு சனிக்கிழமை பயணித்தார். அப்போது விமானத்தில் அவருக்கு உடைந்த இருக்கை ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,
ஏர் இந்தியா விமானத்தில் எனது இருக்கையில் அமர்ந்தபோது அது உடைந்து உள்ளே சென்றுவிட்டது. இதுகுறித்து விமான ஊழியர்களிடம் கேட்டதற்கு, அந்த இருக்கை நன்றாக இல்லை எனக் கூறி அதன் டிக்கெட்டை விற்க வேண்டாம் என்று நிர்வாகத்திற்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டதாக கூறினர்.
ஒரு இருக்கை மட்டுமல்ல இன்னும் பல இருக்கைகள் அப்படிதான் இருந்தன. இதனை அறிந்த சக பயணிகள் நல்ல இருக்கையில் அமரும்படி கேட்டுக் கொண்டனர். ஏன் மற்றொரு நண்பரை தொந்தரவு செய்ய வேண்டும் என நினைத்து அதே இருக்கையில் எனது பயணத்தை முடிக்க முடிவு செய்தேன்.