சென்னை: தமிழக காவல் துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர் ஆர்.சுதாகர். இவர் சென்னை காவல் துறையில் துணை ஆணையர், இணை ஆணையர், கூடுதல் காவல் ஆணையர், மேற்கு மண்டல ஐஜி என பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார். சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக பணியாற்றியபோது, விருப்பத்தின் பேரில் மத்திய அரசு பணிக்கு சென்றார்.
மத்திய அரசு பணியில் போதைப்பொருள் தடுப்பு வடகிழக்கு பிரிவில் துணை இயக்குநர் ஜெனரலாக அசாம் மாநிலம் கவுகாத்தியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவருக்கு போதைப்பொருள் தடுப்பு தெற்கு பகுதி துணை இயக்குநர் ஜெனரல் என்ற பொறுப்பை கூடுதலாக வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த புதிய பொறுப்பின் மூலம் தென் மாநிலங்களான தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையும் இனிமேல் இவரது கட்டுப்பாட்டில் வரும். சென்னை அம்பத்தூர் அருகே உள்ள அயப்பாக்கத்தில் செயல்படும் மத்திய போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்தில் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.