அங்கிருந்து கிளம்பி தி.நகரில் ஒரு ஹோட்டலுக்குள் காங்கிரஸ் குழு நுழைய, பாலோ செய்து வந்த காமிராக்கள் ஹோட்டலுக்குள்ளும் நுழைந்தன. ‘ஒண்ணும் இல்லங்க… சும்மா காபி குடிக்க வந்தோம்…நீங்களும் வேணா வாங்க..’ என காமிரா மேன்களுக்கும் காபி வாங்கி கொடுத்துவிட்டு அறிவாலயத்தை நோக்கி கோவாக்காரரோடு கிளம்பினார்.

கூட இருக்குற கோவாக்காரர்தான் பிரச்னைன்னு தெரிஞ்சும் அவரை கூட வச்சுட்டே சுத்துற அண்ணனோட சகிப்புத்தன்மைக்கும் தைரியத்துக்கும் சத்யமூர்த்தி பவனில் சிலையே வைக்கலாம் என கதர் சட்டையினர் கிசுகிசுத்துக் கொண்டனர்.
கூட்டணி கையெழுத்தானவுடனும் பழைய மாதிரியே கோவாக்காரரை பெரிதாக பேசவிடாமல் லாவகமாக நகர்த்தி சென்றுவிட்டார் பெருந்தகை. ஆனால், கோவாக்கார சோடங்கர் படு உஷார். சென்னை நிருபர்களுக்கு போன் செய்து நான் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் இருக்கிறேன். பைட் எதுவும் வேண்டுமானால் வாருங்கள்’ என மெசேஜ் தட்டிவிட்டார். ஒட்டுமொத்த மீடியாவும் ஹோட்டலில் ஆஜர்.. அங்கே ஒரு பிரஸ்மீட்.
இப்போதாவது நிம்மதியாக காபி குடிக்கலாம் என நினைத்த பெருந்தகைக்கு மீண்டும் ஷாக். அவர் வாயை திறந்தால் விவகாரமாகிவிடும் என்பதால், சோடங்கரை தனியாக அழைத்து இந்த விஷயங்களை மட்டும் பேசுங்கள் என சில விஷயங்களை குறிப்பிட்டு கோரிக்கை வைத்தார். கொஞ்சம் கோவக்காரனா இருந்தாலும் மரியாதை தெரிந்தவர் இந்த கோவாக்காரன் என பீல் செய்த சோடங்கர், பெருந்தகையின் மனம் கோணாதபடிக்கு பேட்டி கொடுத்து விடைபெற்றார்.
ஒரு கூட்டணியை முடிவு பண்றதுக்குள்ள மனுசனை என்ன பாடு படுத்துறானுகய்யா என்கிற பாவனையோடு கடைசியாக ஒரு காபியை நிம்மதியாக உறிஞ்சி குடித்துவிட்டு ஹோட்டலிலிருந்து விடைபெற்றார் பெருந்தகை!