மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் மனைவிக்குக் கருச்சிதைவு ஏற்பட்டதற்குப் பக்கத்து வீட்டுக்காரர்கள் இரண்டு பேரை கடவுளுக்குப் பலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அங்குள்ள அதர்வா என்ற கிராமத்தில் வசிப்பவர் சத்ரபதி சிங்(21). இவரது மனைவிக்குச் சமீபத்தில் கருச்சிதைவு ஏற்பட்டது. இதனால் சிங் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்தார். கடவுளின் கோபத்தால்தான் இது போன்ற சம்பவம் நடந்துவிட்டதாக நம்பினார்.
இதனால் கடவுளைச் சாந்தப்படுத்த தனது வீட்டில் சிங் பூஜை ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்தப் பூஜைக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் பூல்குமாரி சிங்(50), கமலா சிங்(65) ஆகியோரை தனது வீட்டிற்கு அழைத்திருந்தார்.
பூஜை நடந்து கொண்டிருந்தபோது திடீரென சிங் பக்கத்து வீட்டுக்காரர்கள் இரண்டு பேரையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். அவர்களின் சத்தம் கேட்டு பக்கத்து வீடுகளில் வசிக்கும் ராஜ்பஜன் சிங் மற்றும் சுமித்ரா சிங் ஆகியோர் வந்து தடுக்க முயன்றனர்.
அவர்கள் இரண்டு பேரையும் சிங் தாக்கினார். அவர்கள் இரண்டு பேரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து கேள்விப்பட்டதும் போலீஸார் விரைந்து வந்தனர்.
கொலை செய்யப்பட்ட இரண்டு பேர் உடல் அருகில் தேங்காய், அகர்பத்தி மற்றும் பூஜைப் பொருட்கள் கிடந்தன. போலீஸார் சிங்கைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு வெளியில் மிகப்பெரிய மேடை ஒன்றை சிங் கட்டி இருக்கிறார். அதில் மிகப்பெரிய பூஜை செய்யப்போவதாகவும் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் தெரிவித்தார்.
இது குறித்து போலீஸ் அதிகாரி காயத்ரி கூறுகையில், “‘பில்லி சூனியத்தால் இச்சம்பவம் நடந்திருப்பதாகச் சந்தேகப்படுகிறோம். கொலை செய்யப்பட்டவர்களும், கொலை செய்தவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த தூரத்து உறவினர்கள் ஆவர்.
அதே கிராமத்தைச் சேர்ந்த யாரோ தனக்கு பில்லி சூனியம் வைத்திருப்பதாகக் கருதி சிங் இக்காரியத்தைச் செய்துள்ளார். அதோடு சிங் மனைவிக்குச் சமீபத்தில் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக கடவுளைச் சாந்தப்படுத்த இது போன்ற பலிகளைக் கொடுத்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது” என்றார்.