மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தென்னாம்பட்டினம் ஊராட்சி மாத்தாம்பட்டினத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. 100க்கும் மேற்பட்டோர் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணாக்கர்கள் இங்கே இருக்கிறார்கள். மாத்தாம்பட்டினத்தில் இருந்து கோணயாம்பட்டினம், கீழமூவர்க்கரை, மேலமூவர்க்கரைக்கு செல்ல ஏதுவாக முல்லையாற்றின் குறுக்கே 100மீ நீளத்தில் மூங்கில் பாலம் ஒன்று போடப்பட்டது.
ஆண்டாண்டுக் காலமாக மக்கள் அப்பாலத்தினை பயன்படுத்தியும் வந்துள்ளனர். இப்பாலத்தின் வழியே கோணயாம்பட்டினம், மேலமூவர்க்கரை, கீழமூவர்க்கரைக்கு செல்ல 1 கி.மீ தொலைவு தான். ஆனால், இப்பாலம் இன்றி சென்றால் சுமார் 4 கி.மீ தூரம் சுற்றித்தான் செல்ல வேண்டும். இதனால், இப்பாலமானது அப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இப்பாலத்தினை பள்ளி செல்லும் மாணாக்கர்கள், விற்பனைக்கு வெளி ஊருக்கு செல்வோர், அத்தியாவசிய தேவைக்கு அடுத்த ஊருக்கு செல்வோர் என பலரும் பயன்படுத்தி வந்த நிலையில், சுமார் ஐந்து வருடக்காலமாக மூங்கில் பாலத்தின் நிலையானது நாளுக்கு நாளுக்கு நாள் மோசமடைந்தே சென்றுள்ளது.
பாதிக்கு மேல் சேதமடைந்து இடையில் பிடிப்பதற்கு பிடிமானம் இன்றி ஆபத்தான நிலையில் இருக்கும் இப்பாலத்தில் பள்ளி மாணவர்கள் உயிரை பயணம் வைத்து கடந்து செல்லும் காட்சியானது சமூக வலைதளங்களில் பரவி பார்போரின் நெஞ்சையே பதைபதைக்க செய்த நிலையில், இன்றைய தினம் ஆட்சியர் ஆய்வு செய்து மூங்கில் பாலத்தை முழுமையாக இடிக்க உத்தரவிட்டு, இடிக்கப்பட்டிருக்கிறது.
தற்சமயம் மூங்கில் பாலம் அமைத்து தருவதாகவும், பின்பு கான்கிரீட் பாலம் அமைத்து தருவதாகவும் மக்களிடம் கூறியுள்ளார், ஆட்சியர். மாணவர்கள் தினந்தோறும் பள்ளி சென்று வர வாகனமும் ஏற்பாடு செய்துள்ளார்.
இது குறித்து அப்பகுதி மக்களிடம் பேசியபோது, “இந்த பாலம் இருக்குறது எங்களுக்கு போய் வர வசதியா இருந்துச்சு. ஆனா, இப்ப பாலத்தோட நெலமையே ரொம்ப மோசமா இருந்துச்சு. இருந்தாலும் நாளு கிலோமீட்டர் சுத்தி போக முடியாதுன்னு எல்லாரும் இதுலதான் போறோமே. ஸ்கூல் புள்ளைங்க கூட இதுல தான் மரண பயத்தோட தெனமும் நடந்து போவுதுங்க.