சுவீடன் நாட்டில் உள்ள டலர்னா மாகாணத்தில் நார்வேஸ் ப்ருஸ் என்ற மரம் 9,567 ஆண்டுகளாகத் தொடர்ந்து உயிர் வாழ்வதாக கண்டுபிடித்து, அதனை நிரந்தரமாகப் பாதுகாக்கவும் அந்த நாட்டு அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
இதன் பெயர் பழைய டிக்கோ. விஞ்ஞான ஜோடியே இந்த மரத்தை கண்டுபிடித்தனர். அவர்கள் அன்புடன் ஒருமுறை வளர்த்த நாயின் பெயர் டிக்கோ என்பதால், அந்தப் பெயரையே மரத்துக்கு வைத்துவிட்டனர். உலக தாவரவியல் உலகத்தினரும் உறுதி செய்துள்ளனர். இதனை வைத்து பார்க்கும்போது, பிரமிடுகள், ஸ்டோன்ஹஞ்ச் போன்றவை கூட இந்த மரத்துக்கு மிகவும் பின்னால் வந்தவையாகும்.
இது தனியான ஒரு மரம் என்பதைவிட ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புதிய தண்டுகள்,கிளைகள், வேர்கள் மீண்டும் மீண்டும் க்ளோனிங் முறையில் தாங்களே உருவாகிக் கொண்டே இருக்கிறது. பனி யுகம், கடும்பனி, கடும் மழை என எதுவுமே இதனை முழுமையாகப் பாதிக்கவில்லை. எல்லாவற்றையும் தாங்கி, ‘ஃபுலுஃப்ஜாலெட்’ என்ற மலையில் தன்னிச்சையாக வாழ்ந்து வருகிறது.
தாவர குளோனிங் முறையில் தொடர்ந்து வளரும், வாழும் இந்த மரம் ஐந்து மீட்டர் உயரம் மட்டுமே வளர்ந்துள்ளது. மரத்தின் அடியில் இருந்து சேகரிக்கப்பட்ட மரபணு ரீதியான தாவரப் பொருள்களை ஆய்வு செய்து வயது தீர்மாணிக்கப்பட்டது. தண்டு இறந்து விட்டாலும் வேர் அமைப்பு உயிருடன் இருப்பதால் புதிய தண்டுகள், கிளைகள் உருவாகி தொடர்ந்து வாழ்ந்து வருகிறது.