"மாணிக்கம் தாகூர் தினமும் அறிக்கை விடுவதில் எங்களுக்கு உடன்பாடில்லை" – அமைச்சர் ஐ.பெரியசாமி

Spread the love

திண்டுக்கல், ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அகரம் பேரூராட்சியிலுள்ள அகரம் கிராமத்தில் புதிய நியாய விலைக்கடைக் கட்டடத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.

பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, “தனிப்பட்ட நபர்களின் கருத்துக்குப் பதில் சொல்வது நியாயமாகப்படவில்லை.

காரணம் என்னவென்றால் நான் ஒரு கட்சியின் அமைச்சராக இருக்கிறேன். எனது அருகில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி-யாக சச்சிதானந்தம் இருக்கிறார்.

எனக்கும், என்னுடன் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி-க்கும் கட்சிக் கட்டுப்பாடு உள்ளது. நாங்கள் கட்டுப்பாட்டுடன் வளர்ந்தவர்கள். கருத்து என்பது கட்சிக்கு உடன்பாடு உள்ளதாக இருக்க வேண்டும்.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

மாணிக்கம் தாகூர் எம்பி தினமும் அறிக்கை விடுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இயக்கத்தின் தலைவர்கள் சொன்னால் அதற்குப் பதில் சொல்லலாம்.

ஏற்கனவே இருந்த அதிமுக அரசு ஐந்தரை லட்சம் கோடி கடனை வைத்து விட்டு சென்றது. அதற்கு ஓராண்டிற்கு வட்டி தோராயமாக 36,000 லிருந்து 40,000 கோடி ரூபாய் வரும். புள்ளி விபரம் என்னிடம் இல்லை.

மாநில அரசு நிர்வாகத்தில் மூலதனங்களை உருவாக்குவதற்கும், விவசாயிகளுக்கு நன்மை செய்வதற்கும், ஏழை, எளிய மக்களுக்கு சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றுவதும் அவசியம்.

அமைச்சர் ஐ. பெரியசாமி
அமைச்சர் ஐ. பெரியசாமி

முதியோர் ஓய்வூதியம் திண்டுக்கல்லில் மட்டும் கடந்த வாரம் பத்தாயிரம் நபர்களுக்குக் கொடுத்துள்ளோம்.

திமுக ஆட்சிக் காலத்தில் திண்டுக்கல் முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கும், தொகுதிக்கு 20,000 பேருக்கும் முதியோர் உதவித்தொகை கொடுத்து இருந்தோம்.

அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அனைத்தையும் நிறுத்திவிட்டார். ஒன்பது லட்சம் பேரின் முதியோர் உதவித் தொகையை நிறுத்திய பெருமை அதிமுக-வைச் சேரும்.

தற்போது அதனைச் சரி செய்து, ஒரு லட்சத்து பத்தாயிரம் நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை கொடுத்து வருகிறோம்.

திருமாவளவன் – ராமதாஸ் பேசுவது பற்றிச் சொல்லியிருப்பது செல்வப்பெருந்தகையின் கருத்து. சேர்வது என்பது அவரவர் கருத்து. சேர்வது நல்லதுதான். யாருக்கு ஆட்சேபனை இருக்கிறது?

திருமாவளவன், ராமதாஸ்.
திருமாவளவன், ராமதாஸ்.

முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் இருந்து தமிழ்நாட்டில் எல்லா எதிர்க்கட்சிகளையும் சேர்த்து தேர்தலைச் சந்தித்துள்ளோம். 2006 இல் அப்படிதான் தேர்தலைச் சந்தித்து ஆட்சிக்கு வந்தோம். நல்லாட்சியும் கொடுத்தோம்.

தற்போது திமுக கூட்டணி பலமாக உள்ளது. இடதுசாரி இயக்கம், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி என எல்லாக் கட்சியும் நம்முடன் உள்ளன. யார் கூட்டணிக்கு வந்தாலும் அவர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மறுக்கப் போவதில்லை. வந்தால் நிச்சயமாக முதலமைச்சர் அது குறித்து முடிவு செய்வார்” என்றார்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *