என்னைப் பொறுத்தவரை, ஒற்றைத்துவத்திற்கு எதிரானவர் காந்தி. இந்து – முஸ்லிம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி, மதநல்லிணக்கத்துக்கான மகத்தான மந்திரம் காந்தி, இந்தியா அனைவருக்குமான நாடு என்ற கருத்தியல்தான் காந்தி. “நான் கொல்லப்பட்டாலும் கூட ராம், ரஹீம் என்கிற பெயர்களை அடிக்கடி உச்சரிப்பதை விடமாட்டேன். இரண்டும் ஒரே கடவுளின் பெயர்கள்” என்று சொன்னவர் காந்தி. இதனால்தான், மதத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் அற்பர்களுக்கு காந்தியை பிடிப்பதில்லை.

அண்மையில், பா.ஜ.க.வை சேர்ந்த ஒரு முதலமைச்சரே முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுவதை பார்த்திருப்பீர்கள். இதை சொல்லவே வெட்கமாக இருக்கிறது. ஆனால், எந்த வெட்கமும் இல்லாமல் இப்படியான செயல்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கூட இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள்.
கிறிஸ்துமஸ் அன்றைக்கு கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். மாற்றுத்திறனாளி என்றுகூட பார்க்காமல், சிறுமி மீது தாக்குதல் நடத்துகிறார்கள். தமிழ்நாட்டிலும், இப்படிப்பட்ட சம்பவங்களை அரங்கேற்ற வேண்டும் என்று வெறி பிடித்து அலைகிறார்கள். நம்முடைய அரசும், உங்களைப் போன்ற தோழமை கட்சிகளும் இருக்கும் வரை, அதை நாங்கள் நடக்க விடவே மாட்டோம்.