சர்க்கரைநோய் என்பது ஒரு நாள் மட்டும் வரும் பிரச்னை அல்ல. மாத்திரையை ஒரு நாள் நிறுத்தினாலும் உடலில் சர்க்கரை அளவு திடீரென உயரக்கூடும். நீங்கள் தினமும் மாத்திரை போடுபவர் என்பதால், அந்த மாத்திரையின் தாக்கத்தோடு உங்கள் உடல் எப்படி இயங்குகிறது என்பதை அறிவதே சரியான டெஸ்ட் ரிசல்ட்டாக இருக்கும். முந்தைய நாள் இரவு மாத்திரை எடுத்துக்கொள்வதன் மூலம், மறுநாள் காலை வெறும் வயிற்றில் சர்க்கரை (Fasting) அளவு எப்படியிருக்கிறது என்று பார்க்கலாம். காலை உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து எடுக்கும் டெஸ்ட்டிற்கும், காலை மாத்திரை மிக அவசியம். அப்போதுதான் உணவு உண்ட பின் சர்க்கரை எவ்வளவு உயர்கிறது என்பதையும் மருந்து அதைக் கட்டுப்படுத்துகிறதா என்பதையும் பார்க்க முடியும்.

மாத்திரை போடாமல் டெஸ்ட் எடுத்து, சர்க்கரை அளவு அதிகமாகக் காட்டினால், மருத்துவர் உங்களுக்குத் தேவையில்லாமல் கூடுதல் மாத்திரைகளையோ அல்லது இன்சுலினையோ பரிந்துரைக்க நேரிடும். இது உண்மையில் தவறான சிகிச்சைக்கு வழிவகுக்கும். உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்று சந்தேகம் வந்து, முதல்முறை டெஸ்ட் எடுக்கும்போதும், குறிப்பிட்ட காரணங்களுக்காக மாத்திரை போடாமல் டெஸ்ட் எடுத்துப் பாருங்கள் என உங்கள் மருத்துவர் பிரத்யேகமாகச் சொல்லியிருந்தாலும் மட்டுமே மாத்திரைகள் போடாமல் டெஸ்ட் செய்ய வேண்டும். மற்றபடி, சர்க்கரைநோய்க்கு வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளை எடுத்துக்கொண்டு டெஸ்ட் செய்வதுதான் சரியானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.