‘மாயா தன்னுடைய காதணியைக் கழற்றி தன்னுடைய பாண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டே காணாமல் போனதாகச் சொல்லி உங்களையும் என்னையும் ஏமாற்றியிருக்கிறாள் மேடம். விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு இரவு உணவுடன் அளிப்பதற்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த தர்பூசணிப் பழங்கள் மாயா கண்களில் பட்டவுடன் யாரும் இல்லாத நேரத்தில் உணவுக்கூடத்திற்குச் சென்று தர்பூசணிப் பழத்தை எடுத்து, மறைத்து வைக்கத் திட்டம் போட்டிருக்கிறாள்.
செல்ல அனுமதியை உங்கள் வழியாகப் பெற்றிருக்கிறாள். நான் அனுமதி தரமாட்டேன் என்றுகூறினேன், நீங்கள் தான் …….’ என்று உரையாடலை முடிக்காமல் வேகமாகச் சென்றுவிட்டார்.
ஆசிரியைகளுக்கான அறையில் வந்து அமர்ந்தேன். என்னால் என்னை சமாதானம் செய்துகொள்ளமுடியவில்லை. காலை மூன்றாவது பாடவேளையில் மாயாதேவியின் வகுப்புக்குச் செல்லவேண்டும்.
நான் நுழைவதற்கு முன் மாயா என்னை நோக்கி வந்தாள். வராண்டாவில் ‘வெரி வெரி சாரி மேடம்’ என்று திரும்பத் திரும்பக் கூறினாள்.
‘என்ன வேலை செய்திருக்கிறாய் மாயா? ஏன்’? என்று நான் கேட்டபோது
‘ஒரு கிக் தான் மேடம். திருடி சாப்பிட்டால் சுவையாக இருக்கும், ஒரு கிக்கும் இருக்கும். நான் மட்டுமா சாப்பிடுவேன், பகிர்ந்து கொடுத்துதான் சாப்பிடுவேன்’ என்றாள்.
வாய் அடைத்து நின்றேன்.
என்ன இளைய தலைமுறை? என் எதிர்பார்ப்பு தவறா? என் கணிப்பு தவறா? தங்கம் விற்கும் விலைக்கு யாரும் கையில் இருப்பதைத் தவறவிடக்கூடாது என்ற என் எண்ணம் தவறா?
நகைக்கடை உரிமையாளரின் மகள் என்ன அறச் சிந்தனையுடன் வளர்கிறாள்? இதில் ஆசிரியர்களின் பங்கு என்ன? ஆசிரியர்கள் சரியான முன்னுதாரணமாக திகழவில்லையா?
மாயாதேவியா? மாயதேவியா? புரியவில்லை.
-விஜயலட்சுமி சங்கரன்