மார்ச் 7-ம் தேதி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி: தக்கோலத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்கிறார் | Awareness cycle rally on 7th March

1353113.jpg
Spread the love

சென்னை: மத்திய தொழில் பாதுகாப்பு படை தினத்தையொட்டி, கடல் வளத்தை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்கிறார் என தென்மண்டல தலைமையக ஐ.ஜி. எஸ்.ஆர்.சரவணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) உருவாக்கப்பட்டு 56 ஆண்டுகள் ஆவதை ஒட்டி, வரும் 7-ம் தேதி ‘சிஐஎஸ்எஃப் தினம்’ கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அன்றைய தினம், ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையின் மண்டல பயிற்சி மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று கடற்கரை சைக்கிள் பேரணியைத் தொடங்கி வைக்கிறார்.

அதேபோல், குஜராத் மாநிலம், லக்பத் கோட்டை மற்றும் மேற்குவங்க மாநிலம் பக்காளி கடற்கரையில் இருந்தும் இரு பிரிவுகளாக இந்த சைக்கிள் பேரணி தொடங்குகிறது. ‘பாதுகாப்பான கடல்வளம், செழிப்பான இந்தியா’ என்ற கருப்பொருளுடன் நடத்தப்படும் இப்பேரணியில், 14 பெண் வீரர்கள் உட்பட 125 வீரர்கள் பங்கேற்கின்றனர். 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 6,553 கி.மீ. தொலைவை 25 நாட்களில் கடந்து, வரும் 31-ம் தேதி கன்னியாகுமரி உள்ள விவேகானந்தர் நினைவிடத்தில் தங்களது பேரணியை நிறைவு செய்ய உள்ளனர்.

இப்பேரணியின் முக்கிய நோக்கம், நாட்டின் கடல் எல்லை பாதுகாப்பு, போதைப் பொருள் இல்லாத சமூகம், கடல் பாதுகாப்பில் மீனவர்களின் பங்களிப்பு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான். மேலும், இப்பேரணியின்போது கலை நிகழ்ச்சிகள், பொதுமக்களைச் சந்தித்தல் ஆகிய நடைபெறுவதோடு, தூய்மைப் பணி மற்றும் மரம் நடுதல் உள்ளிட்டவையும் மேற்கொள்ளப்படும்.

இதன்படி, இப்பேரணி வருகையை முன்னிட்டு சென்னையில் வரும் 25-ம் தேதி சென்னை துறைமுகத்திலும், 26-ம் தேதி புதுச்சேரியிலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும். இவை தவிர, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பேண்டு வாத்திய இசை நிகழ்ச்சி, நாடகங்கள், சாகச நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

இப்பேரணியில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் போதிய உடற் தகுதி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது. பேரணியில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் www.cisfcyclothon.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று வீரர்களை உற்சாகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது, சிஐஎஸ்எஃப் டிஐஜி.க்கள் ஆர்.பொன்னி, அர்ஜுன் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *