கொள்ளை சம்பவம், அதில் சம்பந்தப்பட்ட கவின், ஆண்ட்ரியா, பவன் ஆகியோரின் அறிமுகம், அவர்கள் முன் நிற்கும் பெரிய பிரச்னை போன்றவற்றை அடுக்கி, தொடக்கக் காட்சியையே இடைவேளை காட்சியைப் போல வைத்துத் தொடங்குகிறது படம்.
கவினின் குடும்பப் பின்னணி, அவரின் டிடெக்டிவ் சேட்டைகள், அவற்றைத் தாண்டி அவர் செய்யும் சாகசங்கள், ஆண்ட்ரியாவின் கதை, அவருக்கு இருக்கும் வெவ்வேறு முகங்கள், ட்விஸ்ட்கள், பவனின் கதை என மூன்று நெடுஞ்சாலைகளும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டபடியே நகர்ந்தாலும், எங்குமே நிதானமும், அழுத்தமுமில்லாமல் அச்சாணி இல்லா தேர் போலப் படம் ஓடிக்கொண்டேயிருக்கிறது.

கலகலப்பூட்டும் சில காட்சிகள், ரசிக்க வைக்கும் சில ஐடியாக்கள் போன்றவைச் சுவாரஸ்யத்தைத் தக்க வைத்தபடியே நகர்ந்தாலும், அதீத கதை சொல்லல் அயற்சிக்கே வித்திடுகிறது.
நெல்சனின் வாய்ஸ் ஓவர், முக்கியக் கதாபாத்திரத்தின் வாய்ஸ் ஓவர், துணை கதாபாத்திரங்களின் வசனங்கள், பின்னணி இசை என எல்லாம் ஒரே தருணத்தில் வருவது, ‘நான்கு ஒலிச்சாலை’யில் பயணிக்கிற உணர்வைத் தருகிறது. இவற்றைத் தாண்டி கொள்ளை சம்பவத்தில் நடக்கும் லூட்டியும், இடைவேளை ட்விஸ்ட்டும் க்ளிக் ஆகியிருக்கின்றன.