மீண்டும் ஈரானை தாக்கிய இஸ்ரேல்.. தாக்குதலுக்கு பிறகு பேசிய பேச்சு – Kumudam

Spread the love

ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே ராணுவ நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக பாலஸ்தீனத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் இஸ்ரேல் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மத்திய பகுதிகளில், இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
 
ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கியமான தலைவர்களை குறிவைத்து, இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலின் தற்போதைய வான்வழி தாக்குதலில், 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அப்போது தெற்கு லெபனானில் உள்ள யுனிபில் தலைமையகத்திலும், அதன் அருகிலுள்ள ஐநா அமைதிப்படை தளம் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலின் இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் 2 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐநா அமைதிப்படையின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் தாக்குதலை சமாளிக்கும் விதமாக, ஈரான் உதவியுடன் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா ஆதரவு அளித்து வருகிறது. இதனையடுத்து, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதிலும் ஹிஸ்புல்லா அமைப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மத்திய பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதேநேரம் இஸ்ரேலின் தரைவழி படைகள், ஐநா அமைதி குழு தலைமை தலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. 

இதனைத்தொடர்ந்து லெபனான் மீது கடந்த அக்டோபர் 17ம் தேதி வான்வழியே இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் 27க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இவர்களில் தெற்கு பகுதியை சேர்ந்த நகர மேயர் ஒருவரும் அடங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தாக்குதலில் பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்தன. எனினும், இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, தெற்கு பகுதி நகரான குவானாவில், ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி ஜலால் முஸ்தபா ஹரிரி என்பவரை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 15 பேர் உயிரிழந்தனர் என தெரிவித்து உள்ளது.

இதனையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பின்புலத்தில் இருந்து செயல்பட்ட முக்கிய புள்ளியான யாஹ்யா சின்வார் மரணம் அடைந்து விட்டார் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அக். 18ம் தேதி உறுதி செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது 200 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி ஈரான் அண்மையில் தாக்குதல் நடத்தி இருந்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே ராணுவ நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. தங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி தரும் உரிமை உண்டு எனவும் இஸ்ரேல் ராணுவன் தெரிவித்துள்ளது

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *