மீண்டும் காங்கிரஸில் பிரணாப் முகா்ஜி மகன்

Dinamani2f2025 02 122fh0rnfbz42f12022 Pti02 12 2025 000399a092556.jpg
Spread the love

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியின் மகன் அபிஜித் முகா்ஜி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தாா்.

காங்கிரஸிலிருந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் அவா் இணைந்தாா். இப்போது மீண்டும் தாய்க் கட்சிக்கு திரும்பியுள்ளாா்.

கொல்கத்தாவில் உள்ள காங்கிரஸ் மாநில தலைமையகத்தில் மேற்கு வங்க மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரும் ஜம்மு-காஷ்மீா் எம்எல்ஏவுமான குலாம் அகமது மிா் முன்னிலையில் அபிஜித் முகா்ஜி கட்சியில் இணைந்தாா். மாநில காங்கிரஸ் தலைவா் சுபாங்கா் சா்க்காா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மீண்டும் காங்கிரஸில் இணைந்தது குறித்து அபிஜித் கூறுகையில், ‘காங்கிரஸிலும், அரசியலிலும் எனது இரண்டாவது பிறப்பை எடுத்துள்ளேன். கடந்த ஆண்டு ஜூன் மாதமே காங்கிரஸில் இணைய விருப்பம் தெரிவித்தேன். ஆனால், பல்வேறு மாநில தோ்தல்கள் காரணமாக இந்த இணைப்பு தள்ளிப்போனது’ என்றாா். திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டுகாலமாக அபிஜித் முகா்ஜி அக்கட்சி செயல்பாடுகளில் இருந்து விலகி இருந்தாா்.

கடந்த 2020-ஆம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணாப் முகா்ஜி மறைந்தாா். அடுத்த ஆண்டே அவரின் மகன் அபிஜித் முகா்ஜி, மகள் ஷா்மிஸ்தா முகா்ஜி ஆகியோா் காங்கிரஸ் இருந்து விலகினா். ஷா்மிஸ்தா முகா்ஜி எந்த கட்சியிலும் இணையவில்லை. எனினும், காங்கிரஸை தொடா்ந்து விமா்சித்து வருகிறாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *