எல்.கே.ஜி. பையன், பேராசிரியருக்குப் பாடம் எடுப்பதா?
காலையில் பேரணியைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் திமுக மாணவரணி சார்பில் 74 இடங்களில் மொழிப் போர் வீரவணக்க நாள் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் “இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்! எங்கள் மொழி, எங்கள் அடையாளம். கீழடி தமிழர் தாய்மடி. தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும். தமிழ்நாட்டைத் தலை குனிய விட மாட்டேன். தமிழ் வாழ்க” என்ற முழக்கங்களைப் பிரதான கருத்தாக வைத்து கூட்டங்கள் நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின், திருவெற்றியூரில் துணை முதல்வர் உதயநிதி, சைதாப்பேட்டையில் துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், தாம்பரத்தில் பொருளாளர் டி.ஆர்.பாலு, புதுக்கோட்டையில் கனிமொழி கருணாநிதி என 74 இடங்களிலும் மூத்த நிர்வாகிகள், மாணவரணி நிர்வாகிகள், தலைமை கழக மற்றும் இளம் பேச்சாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

காஞ்சிபுரத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது ஒரு வரலாற்றுப்போராட்டம். தமிழ் மண்ணுக்கும், தமிழுக்கும் ஆபத்து வந்தபோதெல்லாம் தமிழகம் கிளர்ந்தெழுந்துள்ளது. காஞ்சிபுரம் அதிகமாகவே போராட்டங்களைக் கண்டுள்ளது. அதனால் மொழிப்போர் தியாகிகளுக்கு அண்ணா பிறந்த மண்ணில் வீரவணக்கம் செலுத்த வந்துள்ளேன்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு, பல்வேறு வழிகளில் இந்தியைத் திணிக்கப் பார்க்கிறது. புதிய கல்விக் கொள்கை தொடங்கி, நிர்வாக ரீதியிலான அறிவிப்புகள் வரை அனைத்திலும் இந்தியைத் திணிக்கிறது. இந்தியா என்பது பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள் கொண்ட ஒரு ஒன்றியம். இங்கே ஒரு மொழியை மட்டும் உயர்த்திப் பிடித்து, மற்ற மொழிகளைப் புறக்கணிப்பது ஜனநாயகப் படுகொலை. சில நாட்களுக்கு முன்னர், சென்னை வந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நமக்கு மொழிப்பாடம் எடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். எல்.கே.ஜி. பையன், பேராசிரியருக்குப் பாடம் எடுப்பது போன்று இருக்கிறது.