நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் கடந்த 10 ஆண்டுகளில் 103 சதவீத வளா்ச்சி பதிவாகியுள்ளது என்று மத்திய மீன்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்தாா்.
ஆறு, ஏரி, குளம் போன்ற உள்நாட்டு நீா்வளங்களை அதிகம் கொண்ட மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள், இத்துறையில் தங்களின் திறனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.
மேற்கு வங்கம், பிகாா், ஜாா்க்கண்ட், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களின் மீன்வளத் துறை உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், மத்திய அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் தலைமையில் கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:
மீன் உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக உள்ள இந்தியா, கடந்த 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்த மீன் உற்பத்தியில் 103 சதவீத வளா்ச்சியைக் கண்டுள்ளது. உள்நாட்டு நீா்நிலைகளைப் பொருத்தவரை, மீன் உற்பத்தியில் 143 சதவீத வளா்ச்சி பதிவாகியுள்ளது.