சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) மற்றும் 16-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை முகூர்த்தம்) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும், பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 340 பேருந்துகளும், நாளை 350 பேருந்துகளும் இயக்கத்திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 55 பேருந்துகளும், நாளை 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து இன்றும், நாளையும் 20 பேருந்துகளும் சிறப்புப் பேருந்துகள் இயக்கத்திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று 7,227 பயணிகளும் சனிக்கிழமை 2,975 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 7,563 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். தொலைதூரப் பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்துக்கு www.tnstc.in இணையதளம் மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.