“முடிந்த பணிக்கு மீண்டும் டெண்டரா?” – தூத்துக்குடி மாநகராட்சியில் சர்ச்சை!

Spread the love

தூத்துக்குடி மாநகராட்சியில் ஒரே பணிக்கு இரண்டு முறை டெண்டர் விடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, பா.ஜ.கவின் மனு மீதான விசாரணையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, ஒரு மூத்த வழக்கறிஞரை ஆணையராக நியமித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் சித்ராங்கதன், மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், `தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தால் கடந்த 04.04.2025 அன்று மின்னணு ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் மொத்தம் ஐந்து பணிகள் குறிப்பிடப்பட்டிருந்தன. அவற்றில் 1, 2 மற்றும் 5-வது எண்களில் இடம்பெற்ற பணிகளாக, தூத்துக்குடி மாநகராட்சி 12-வது வார்டு பி.என்.டி நகரில் பூங்கா அமைத்தல், மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறச் சாலையில் நடைபாதை பயிற்சிக்காக தார் சாலை அமைத்தல் மற்றும் கருப்பட்டி சொசைட்டி ஜங்ஷனில் உள்ள போக்குவரத்து வட்டப்பாதைக்கு வேலி அமைத்து மின்விளக்குகள் நிறுவுதல் ஆகிய பணிகளுக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டிருந்தது.

பணி முடிக்கப்பட்ட பூங்கா

ஆனால், இந்த பணிகள் அனைத்தும் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டு கடந்த 17.02.2025 அன்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் சமூக நலத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் ஆகியோர் முன்னிலையில் திறப்பு விழா நடத்தப்பட்டது.

ஆனால்,  ஏற்கனவே முடிக்கப்பட்ட பணிகளுக்காக மீண்டும் டெண்டர் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த பணிகளுக்கான டெண்டர்களை ரத்து செய்யுமாறு கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ரிட் மனு தாக்கல் செய்தேன். அதன் அடிப்படையில் இந்த வழக்கில் இடைக்கால தடை உத்தரவும் பெறப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அடங்கிய அமர்வில் இன்று (11.03.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி அரசுத் தரப்பில் வாதிட்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி

இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஒரு மூத்த வழக்கறிஞரை ஆணையராக நியமித்து, குறிப்பிட்ட மூன்று பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வரும் 18.03.2026க்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்” என்றார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் ஒரே பணிக்கு இரண்டு முறை டெண்டர்  விடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றக் கிளை ஆணையரை நியமித்திருப்பது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *