Last Updated:
அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், காங்கிரஸுக்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழகத்தில் ஆட்சியில் பங்கும், கூடுதல் தொகுதிகளுக் கேட்டும், காங்கிரஸ் கோரிக்கை வைத்து வந்ததால் திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் இழுபறியும், பிணக்கும் நீடித்து வந்தது. பின்னர் கடந்த சனிக்கிழமை திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடந்தது.
தொடர்ந்து காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் அளித்த பேட்டியில் திமுக கொடுக்க முன்வந்துள்ள 25 இடங்கள் போதாது என்றும், தவெகவைப் புகழ்ந்தும் பேசினார். இதனால், திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடருமா எனும் சந்தேகம் எழுந்தது.
இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ப. சிதம்பரம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
இந்தச் சூழலில், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு இன்று மீண்டும் காங்கிரஸுக்கு திமுக அழைப்பு விடுத்தது. இதனைத் தொடர்ந்து, டெல்லியில் இருந்து காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னை வந்தார். அவருடன் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் இருந்தார். இவர்கள் இருவரும் சென்னை விமான நிலையத்திலேயே இரண்டு மணி நேரமாக ஆலோசனை மேற்கொண்டதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து வெளியே வந்த அவர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய செல்வப்பெருந்தகை, “அகில இந்திய காங்கிரஸிடம் இருந்து அறிவிப்பு வந்ததும், அறிவாலயம் செல்வோம்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், காங்கிரஸுக்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
