திமுக விசிக கூட்டணி இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்த நிலையில் பேசுவார்த்தையில் ஒரு முடிவு எட்டப்பபட்டிருப்பதாக கூறப்படுகிறது. விசிகவுக்கும் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என விசாரித்தோம்.

நம்மிடம் பேசிய விசிக முன்னணி நிர்வாகிகள் “2021 சட்டமன்ற தேர்தலில் 6 சீட்டுகளை பெற்று 4 தொகுதிகளில் வென்றது விசிக. இந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சிக்கு பக்க பலமாக இருந்து கட்சியின் கட்டமைப்பையும் வலுப்படுத்தினோம். இதற்கிடையில் மாநில கட்சியாக அங்கீகாரமும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் மூலம் பெற்றோம்.
ஆகவே 12 தொகுதிகளை பெற்று குறைந்தது 7 இடங்களில் வெல்ல வேண்டும் என்பது விசிகவினரின் கருத்து. ஆகவே முதல் சுற்று பேச்சுவார்த்தையில் இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டார் எங்கள் தலைவர். குறைந்தது 7, 8 தொகுதிகளை திமுக கொடுத்தால் தலைவர் கையெழுத்திட வாய்ப்பு உண்டு” என்றனர்.

இதுகுறித்து அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தோம் “விசிக 10 தொகுதிகள் பெறக்கூடிய அளவுக்கு ஆளுமையான கட்சி என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் தற்போதைய சூழலில் அவ்வளவு ஒதுக்க முடியாது. விசிகவுக்கு 6 தொகுதிகள் கொடுக்கலாம் என பேச்சுவார்த்தை குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கிடையே முதல்வரை சந்தித்து கூடுதல் தொகுதி தர வேண்டும் என கோரியிருக்கிறார் திருமா, எனவே 7 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம்” என்றனர்.